லோக்சபாவில் ஆசாம் கான் 'ஆபாச பேச்சு'.. பாஜக பெண் எம்பி ரமா தேவி கடும் கோபம்.. எம்பிக்கள் அதிர்ச்சி
டெல்லி: லோக்சபாவில் இன்று முத்தலாக் விவாத்தின் போது சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான், சபாநயகர் இருக்கையில் அமர்ந்து இருந்த பாஜக பெண் எம்பி ரமா தேவி குறித்து ஆபாசமாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபாவில் இன்று முத்தலாக் தடை மசோதா குறித்து விவாதம் நடந்தது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா அவையில் இல்லை. இதனால் சபாநாயகர் இருக்கையில் பாஜக எம்பியும் துணை சபாநாயகருமான ரமாதேவி அமர்ந்து அவையை சிறிது நேரம் நடத்தினார்.
அப்போது சமாஜ்வாதி கட்சி எம்பி ஆசம் கான் பேசும் போது "நான் உன்னை மிகவும் விரும்புகிறேன், எல்லா நேரத்திலும் உங்கள் கண்களைப் பார்ப்பது போல் உணர்கிறேன்," என்று கூறி ஆரம்பித்தார். இதனால் அவையில் இருந்த எம்பிக்கள் ஆசம் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி கூச்சலிட்டனர்.
அப்போது ரமா தேவி ஆசம் கானை நோக்கி கோபமாக இப்படியெல்லாம் பேசக்கூடாது.. தயவு செய்து இந்த கருத்தை நீக்குகங்கள் என்றார்.
இதற்கு பதில் அளித்த கான், உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நீங்கள் எனக்கு சகோதரியை போன்றவர் என்றார்.
இதையடுத்து வெளியில் சென்று இருந்த சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் அவைக்கு வந்தார். அப்போது ஆசம் கான் பேசியதை அறிந்து கடுமையாக கண்டித்ததோடு அவரை மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினார். இது தொடர்பாக ஒம் பிர்லா பேசுகையில், நீங்கள் (எம்பிக்கள்) எல்லாரும் ரெம்ப ஈஸியாக கருத்தை நீக்குங்கள் என்று கூறுகிறீர்கள். ஒருமுறை பேசிவிட்டால் அது பொதுமக்களின் பார்வைக்கு சென்றுவிடும். எனவே நாடாளுமன்றத்தில் பேசும் போது நாம் அனைவரும் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
இதனிடையே ஆசம் கான் ரமா தேவி குறித்து ஆபாசமாக பேசியதற்காக அவையில் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.