வேளாண் சட்டத்தை 3 வருஷத்துக்கு நிப்பாட்டுங்க; போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைங்க - பாபா ராம்தேவ்
டெல்லி: வேளான் சட்டங்களை மூன்று வருட காலத்திற்கு நிறுத்தி, விவசாயிகளின் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு யோகா குரு பாபா ராம்தேவ் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளார்.
அரசின் செய்தித் தொடர்பாளராகவோ அல்லது ஒப்பந்த விவசாயியாகவோ இந்த பிரச்சனை குறித்து பேச விரும்பவில்லை என்றும் தனி மனிதனாக பேச விரும்புவதாகவும் அவர் கூறினார்.
விவசாயிகள் அரசுடன் அமர்ந்து, விவசாயிகள் மற்றும் நாட்டின் நலன்களுக்கான கொள்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் பாபா ராம்தேவ் தெரிவித்தார்.
டெல்லியில் தொடர் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 80 நாளுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது.ஆனால் இதில் எதிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை.
திசைமாறிய டிராக்டர் பேரணி
இதற்கிடையே குடியரசு தினம் அன்று நடைபெற்ற டிராக்டர் பேரணி திசைமாறி வன்முறையாக வெடித்தது. போராட்டக்காரர்கள் கூட்டத்தில் விஷமிகள் புகுந்ததால் போலீசார் தடியடி நடத்தினார்கள். பலர் டெல்லி செங்கோட்டையை சென்று அங்கு காலிஸ்தான் கொடிகளை ஏற்றியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்தும் விவசாயிகள் டெல்லியின் பல்வேறு எல்லைகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாபா ராம்தேவ் ஆதரவு
விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆதரவு குரல்கள் குவிந்தன. இந்த நிலையில் வேளான் சட்டங்களை மூன்று வருட காலத்திற்கு நிறுத்தி, விவசாயிகளின் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு யோகா குரு பாபா ராம்தேவ் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளார். ஒரு தொழில் அதிபர் வீடு திருமண விழாவில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது:- புதிய வேளான் சட்டங்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் அமைதி நிலவ வேண்டும்.
தனி மனிதனாக பேசுகிறேன்
அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராகவோ அல்லது ஒப்பந்த விவசாயியாகவோ இந்த பிரச்சனை குறித்து நான் பேச விரும்பவில்லை. இப்பிரச்சனையில் தான் ஒரு தீர்வைக் காண விரும்பவே தனி மனிதனாக பேசுகிறேன். விவசாயிகள் அரசுடன் அமர்ந்து, விவசாயிகள் மற்றும் நாட்டின் நலன்களுக்கான கொள்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பாபா ராம்தேவ் தெரிவித்தார்.