பாபர் மசூதி வழக்கில் அத்வானி விடுதலை: வீடியோக்கள் இல்லை..போட்டோ நெகட்டிவ்களை கோர்ட்டில் சிபிஐ தரலை!
டெல்லி: 28 ஆண்டுகாலமாக நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு தொடர்பான கிரிமினல் வழக்கில் சிபிஐ உரிய ஆவணங்களுடன் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறியதால் அத்வானி உள்ளிட்ட 32 பேரையும் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.
1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக அத்வானி உள்ளிட்டோர் 2001-ல் ரேபரேலி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட சிபிஐ மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் 2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து அத்வானி உள்ளிட்டோர் விடுதலையை உறுதி செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால் 2017-ல் அனைத்து பாபர் மசூதி இடிப்பு வழக்குகளும் இன்று தீர்ப்பளித்த லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 'அநீதியான தீர்ப்பு'.. கறுப்பு நாள் இது.. தமிமுன் அன்சாரி கடும் தாக்கு
சிபிஐ அசால்ட் காரணம்
இன்றைய தீர்ப்பில் நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று கூறியிருக்கிறார். மேலும், சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோக்கள் சிதைந்து போயுள்ளன. சிபிஐ தாக்கல் செய்த புகைப்படங்களுக்கான ஒரிஜினல் நெகட்டிவ்கள் கேட்டும் தரவில்லை என நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருப்பதாக வழக்கறிஞர் மணீஷ் திரிபாதி கூறியுள்ளார்.
ஒரு போட்டோ நெகட்டிவ் கூடவா?
28 ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் வழக்கில் 2001-ல் ஒரு அப்பீல்; 2010-ல் ஒரு அப்பீல்.. இத்தனை காலத்திலும் ஒரு உருப்படியான வீடியோ ஆதாரத்தை தாக்கல் செய்யவில்லை. நீதிமன்றம் கேட்ட போட்டோ நெகட்டிவ்களை தர முடியாத பரிதாபத்தில்தான் மத்திய புலனாய்வுத் துறை இருக்கிறது என்பது பெரிய சோகம்!
உளவு அமைப்புகள் வாடிக்கை
உளவு அமைப்புகள் மிக ஈசியாக அதிமுக்கியமான ஆவணங்களை ஒன்று நீதிமன்றத்துக்கு தராது; அல்லது காணாமலே போய்விட்டது என்று ஜால்சாப்பு சொல்லும் போக்கைத்தான் கடைபிடிக்கின்றன. ராஜீவ் காந்தி வழக்கில் அதிமுக்கியமான வீடியோ கேசட்டை ஏன் ஐபி தலைவராக இருந்த எம்.கே. நாராயணன் தாக்கலே செய்யாமல் மறைத்தார் என்பதற்கு இதுநாள் வரை விடை இல்லை என்பதும் முன்னுதாரணம்!
எல்லாமே நாடகம்தானா?
ஆக மேல்முறையீடு கேட்டு மனுத் தாக்கல் செய்வது; வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருப்பது எல்லாமே நாடகம் அன்றி வேறு எதுவுமே இல்லைதானே 'சிபிஐ கோப்பால்'!