பாபர் மசூதி இடிப்பு வழக்கு.. வீடியோ கான்பரன்சில் ஆஜரான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், இன்று காலை, லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நீதிமன்ற அலுவலில் ஆஜராகினர்.
1992ம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அத்வானி உட்பட 32 பேர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகினர். இந்த வழக்கு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால், பாபர் மசூதி வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் மத்திய அமைச்சர், உமா பாரதி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் தங்கள் உடல் நலம் மற்றும் வயது மூப்பு ஆகியவற்றை காரணம் காட்டி நீதிமன்ற நடவடிக்கையில் நேரில் பங்கேற்கவில்லை.
அதேநேரம், குற்றம்சாட்டப்பட்ட 32 பேரில், வினய் கட்டியார், வேதாந்தி, சம்பத் ராய், பவன் பாண்டே லக்னோ நீதிமன்றம் சென்றனர். ஆனால், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, ஆஜராகினர். தங்களை வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பு வழங்கியதை அவர்கள் வீடியோ மூலம் பார்த்தனர்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை- லக்னோ கோர்ட் அதிரடி தீர்ப்பு!
முன்னதாக, தண்டனை தந்தால் தூக்கில் கூட தொங்குவேனே தவிர ஜாமீன் கேட்க மாட்டேன் என்று உமா பாரதி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.