பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகளையும் தண்டிக்க சி.பி.எம். வலியுறுத்தல்!
டெல்லி: பாபர் மசூதி இடிப்பை சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு வெளியிட்ட அறிக்கை:
நீண்டகாலமாக பிரச்சனைக்குரியதாக இருந்து வரும் அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. 2.77 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளை மூலம் கோவில் கட்டுவதற்கு இந்துக்களிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு மாற்றாக சன்னி வக்பு வாரியம், மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தையும் ஒதுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அயோத்தி பிரச்சனையை பயன்படுத்தி மதவாதிகள் வன்முறையை தூண்டி பல உயிர்களை காவு கொண்டு வரும் சம்பவங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இத்தீர்ப்பின் மூலம் முடிவு கட்டியிருக்கிறது.
அயோத்தி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட முடியாது எனில் சட்டப்படியாக தீர்வு காண வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது. இத்தீர்ப்பானது நீதித்துறை மூலம் தீர்வை கொடுத்திருக்கிற போதும் சில கேள்விகளும் எழுகின்றன.
1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம் என்கிறது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. பாபர் மசூதி இடிப்பு என்பது மதச்சார்ப்பற்ற கோட்பாடுகள் மீதான தாக்குதல். அது ஒரு கிரிமினல் குற்றம். ஆகையால் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.
மத வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டத்தின் தேவையை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது. அச்சட்டம் உறுதியாக அமலாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. எந்த ஒரு மத வழிபாட்டுத்தலம் மீதும் புதிய சர்ச்சையைக் கிளப்புவதற்கு அனுமதித்தல் கூடாது.
இத்தீர்ப்பை முன்வைத்து மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை யாரும் மேற்கொள்ளக் கூடாது என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.