செப்.30ம் தேதிக்குள் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு- புது காலக்கெடு நிர்ணயித்த உச்சநீதிமன்றம்
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கான காலக் கெடுவை, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு, மேலும் ஒரு மாதம் நீட்டித்து, இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி தேதிக்குள் தீர்ப்பு வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி, அயோத்தியில் கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில், பாஜக மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட பலரும் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டு இருக்கின்றனர்.
வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி யாதவ் கடந்த வருடம் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருந்தார். ஆனால் வழக்கு விசாரணையை அவரே முடிக்க வேண்டும் என்று விரும்பிய உச்சநீதிமன்றம், உத்தர பிரதேச மாநில அரசுக்கு ஒரு கோரிக்கை முன்வைத்தது.
மவுண்ட் கைலாஷ் புனித தலம் அருகே ராணுவ தளவாடங்களை குவிக்கும் சீனா! அம்பலப்படுத்திய சாட்டிலைட் படங்கள்
நீதிபதி பதவிக் காலம்
இதன்படி, நீதிபதி யாதவ் பதவி காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் அடுத்த 9 மாதங்களுக்குள் இந்த வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது.
கால நீட்டிப்பு
இந்த நிலையில் கடந்த மே மாதம், உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஒரு கடிதம் எழுதி கொரானா நோய் தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு, வழக்கு விசாரணையில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே விசாரணைக்கு கால நீட்டிப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வாக்குமூலம்
இதையேற்று, ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. கடந்த மாதம் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பாஜக மூத்த தலைவர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக வாக்குமூலங்களை பெற்றது சிபிஐ சிறப்பு நீதிமன்றம். அப்போது, தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர்கள் அனைவரும் மறுத்தனர்.
காலக்கெடு
இந்த நிலையில் வழக்கின் நிலை தொடர்பான அறிக்கையை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். மேலும், விசாரணையை முடிப்பதற்கு காலக்கெடு தேவை என்று ஒரு கோரிக்கையை முன்வைத்தார். இதையடுத்து நீதிபதி ரோகின்டன் நாரிமன் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. சுமார் 28 ஆண்டுகள் நீடிக்கும் இந்த வழக்கில் எந்த மாதிரி தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.