வங்கி மோசடி புகார்.. மெஹுல் சோக்சியின் துபாய் சொத்துகள், சொகுசு கார் பறிமுதல்.. அமலாக்க துறை அதிரடி
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி புகாரில் சிக்கியுள்ள மெஹுல் சோக்சியின், ரூ.24 கோடி மதிப்புள்ள துபாய் சொத்துகள் மற்றும் மெர்சிடிஸ் சொகுசு கார் உள்ளிட்டவை அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விஜய் மல்லையாவை தொடர்ந்து வங்கி கடன் மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹூல் சோக்ஸி உள்ளிட்டோர் நாட்டை விட்டு தப்பி வெளிநாடுகளில் தலைமறைவாகினர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.14,000 கோடி கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல், மேற்கண்ட இருவரும் வெவ்வேறு நாடுகளில் தலைமறைவாகினர். இவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் லண்டனில் பதுங்கியிருந்தது கண்டறியப்பட்டு மத்திய அரசின் தீவிர நடவடிக்கையால், நீரவ் மோடி பிரிட்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் அடுத்தடுத்து தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் தள்ளுபடியாகின. இந்நிலையில் அவரை நாடு கடத்தி இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நீரவ் மோடியின் உறவினரான மெஹுல் சோக்சி ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று தங்கியுள்ளார். அவரையும் நாடு கடத்தி, இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது மத்திய அரசு. சட்ட நடவடிக்கைகள் முடிந்த உடன் மெஹூல் சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்தத் தயாராக உள்ளதாக ஆன்டிகுவா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அமலாக்க இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், வைர வியாபாரி மெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான 24 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் அவருக்கு சொந்தமான 3 வணிக சொத்துக்கள், ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் இ 280 சொகுசு கார், ஒரு நிலையான வைப்புக் கணக்கு மற்றும் பல விலையுயர்ந்த பொருட்களை கைப்பறியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 13,500 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான மேற்கண்ட பொருட்களை கையகப்படுத்தியுள்ளதாக அமலாக்க துறை கூறியுள்ளது. மேலும் தற்போது வரை ரூ.2,534 கோடி மதிப்புடைய சொத்துகள் மெஹுல் சோக்ஸியிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.