வங்கி ஊழியர்கள் நாளை முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தம்.. 3 நாட்கள் வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்
Recommended Video
டெல்லி: ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் நாளை முதல் இரண்டு நாட்கள் ( ஜனவரி 31ம் தேதி மற்றும் பிப்ரவரி 1ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்கள். இதன் காரணமாக தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தங்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. அதே நேரத்தில் நிர்வாகம் 12.25% க்கு மேல் செல்ல தயாராக இல்லை. 5 நாள் வேலை வாரம், சிறப்பு ஊதியத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தல், புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்குதல் போன்றவை பிற கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார்கள். ஆனால் அதை ஏற்க இந்திய வங்கிகள் சங்கம் மறுத்துவிட்டது.
இது தொடர்பாக கடந்த ஜனவரி 13ம் தேதி வங்கி ஊழியர்கள் மற்றும் நிர்வாகங்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து நாளை முதல் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் (31ம் தேதி மற்றும் பிப்ரவரி 1ம் தேதி) வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாக நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதன்படி நாளை திட்டமிட்ட படி 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆதங்கத்தில் அழகிரி.. மீண்டும் அதிரடியை காட்டுவாரா.. காத்திருக்கும் அஞ்சாநெஞ்சனின் தொண்டர்கள்
2 நாட்கள் ஸ்டிரைக்
31ம் தேதி வெள்ளிக்கிழமையும், 1ம் தேதி சனிக்கிழமையும், 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல் விடுமுறையாகும். எனவே வங்க ஊழியர்கள் சங்கத்தினரின் வேலை நிறுத்தத்தால் 3 நாட்கள் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. அத்துடன் மாத கடைசி மற்றும் முதல் தேதிகள் என்பதால் சம்பளம் வழங்கும் பணிகளும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏடிஎம்களில் பணம்நிரப்பும் பணியும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் பலரும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
பட்ஜெட் நேரம்
நவம்பர் 2017 முதல் ஊதிய உயர்வுக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் களம் இறங்க வாய்ப்பு உள்ளது.. வங்கி வேலைநிறுத்தம் நடைபெறும் ஜனவரி 31 நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பொருளாதார கணக்கெடுப்பு முன்வைக்கப்படுவதோடு ஒத்துப்போகிறது. ஒரு நாள் கழித்து, பிப்ரவரி 1 ஆம் தேதி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21க்கான மத்திய பட்ஜெட்டை வெளியிட உள்ளார்.
பேச்சுவார்த்தை தோல்வி
இதனிடையே தொழிலாளர் துறை மற்றும் நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை கைவிட வைப்பதற்காக வங்கி தொழிற்சங்கங்களை சமாதானப்படுத்த முயன்றனர், ஆனால் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) மற்றும் வங்கி ஊழியர்களிடையே வேறுபாடுகள் காரணமாக பிரச்சனையை இணக்கமாக தீர்க்க முடியவில்லை.
ஒத்திவைக்க மறுப்பு
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (AIBEA) அதிகாரி ஒருவர் கூறுகையில், பேச்சுவார்த்தைகளுக்காக வங்கி வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் ஒத்திவைக்க வேண்டும் என்று வங்கி சங்கம் விரும்பியது, இது வங்கி நிர்வாக தரப்பில் இருந்து எந்த உறுதிப்பாடும் இல்லாததால் அவர்கள் மறுத்துவிட்டனர் என்றார்.
சேவைகள் பாதிக்கும்
பல வங்கிகள் ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு அதன் சேவைகளை நாளை முதல் இரண்டு நாட்களுக்கு பாதிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), வேலைநிறுத்தத்தால் அதன் அலுவலகங்கள் மற்றும் கிளைகளில் பணிகள் ஓரளவிற்கு பாதிக்கப்படக்கூடும் என்று எச்சரித்துள்ளது. முன்னதாக ஜனவரி 8 ஆம் தேதி, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் 'பாரத் பந்த்' போராட்டத்தை நடத்தியதால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன.