வங்கிகள் இந்த 3 'சி' க்களுக்கு பயப்பட வேண்டியதில்லை.. தாராளமா கடன் கொடுங்க.. நிர்மலா சீதாராமன்
டெல்லி: சி.பி.ஐ. (CBI), மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் (CVC), தலைமை கணக்காயர் மற்றும் தணிக்கை அலுவலர் (CAG), ஆகிய மூன்று 3 'சி'க்களுக்கு வங்கி அதிகாரிகள் பயப்பட தேவையில்லை என்றும் வங்கிகள் எந்த பயமும் இல்லாமல் கடன் வழங்க வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சனிக்கிழமை நிதி அமைச்சக கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது.
இதில் இந்திய வங்கிகள் சங்கம், சி.பி.ஐ. இயக்குனர் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் வங்கி மோசடிகளை தவிர்ப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
ஆன்லைன்
இந்த கூட்டத்துக்கு பின்பு நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் கையகப்படுத்தும் சொத்துகளை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் ஆன்லைனில் ஏலம் விடுவதற்காக eBkray என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார். பொதுத்துறை வங்கிகள் கடந்த 27-ந் தேதி வரை மொத்தம் 35 ஆயிரம் சொத்துகளை இந்த தளத்தின் மூலம் ஆன்லைனில் ஏலம் விடுவற்கான சொத்துக்களை பதிவேற்றம் செய்துள்ளது. கடந்த 3 நிதி ஆண்டுகளில் வங்கிகள் கடன் வாங்கியவர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.2.3 லட்சம் கோடி என்று நிதி அமைச்சம் கூறியுள்ளது.
பயப்பட வேண்டாம்
முன்னதாக கூட்டத்துக்கு பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "வங்கிகள் எந்த பயமும் இல்லாமல் கடன் வழங்குதல் வேண்டும். விவேகமான வர்த்தக ரீதியாக முடிவெடுப்பது நிச்சயம் பாதுகாக்கும். உண்மையான, நேர்மையான முடிவுகள் எடுக்கும்போது சி.பி.ஐ., மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம், தலைமை கணக்காயர் மற்றும் தணிக்கை அலுவலர் ஆகிய 3 ‘சி'க்களுக்கு வங்கி அதிகாரிகள் பயப்பட தேவையில்லை.
நேர்மையான முடிவு
துன்புறுத்துவார்கள் என்ற தேவையில்லாத கவலையால் உண்மையான நேர்மையான முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என்ற கவலை இருந்தது. இன்று சிபிஐ இயக்குனர் முன்னிலையில் (நாங்கள்) வங்கிகளுடன் ஒரு அர்த்தமுள்ள உரையாடலை நடத்தினோம். சந்தேகங்கள் வங்கிகளுக்கு விளக்கப்பட்டுள்ளன.
பழைய நிலை
மத்திய அரசு எடுக்கும் சீர்திருத்த நடவடிக்கைகள் வங்கிகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உதவும். அரசால் எடுக்கப்படும் விரிவான சீர்திருத்த நடவடிக்கைகள் வங்கிகளை மீட்டெடுக்கும். வங்கிகளே அவ்வாறு செய்யாமல் சிபிஐக்கு எந்த விஷயமும் செல்லவில்லை. வங்கிகளுக்கு எதிராக சிபிஐ எடுக்கும் எந்தவொரு சுய மோட்டோ வழக்கையும் எடுப்பதில்லை என்றார்.
ஆலோசனை
சி.பி.ஐ. இயக்குனர் கூறும்போது, ‘‘வங்கிகள் எந்த அச்சத்தையும் தணிக்க அதுதொடர்பான ஆலோசனைகளை எங்களிடம் பெறலாம்'' என்று தெரிவித்தார்.அங்கீகரிக்கப்படாத தகவல்கள் மற்றும் அதனால் ஏற்படும் தொந்தரவுகளை தவிர்ப்பதற்காக சி.பி.ஐ. ஒரு நடைமுறையை வகுக்க வேண்டும். இதற்காக சி.பி.ஐ. அனுப்பும் நோட்டீசுகளில் ஒரு பதிவு எண்ணும் இருக்க வேண்டும் என்று நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பொதுத்துறை வங்கிகள் மோசடி சம்பவங்கள் குறித்து சி.பி.ஐ.க்கு ஒரு குறிப்பிட்ட இமெயில் முகவரியில் புகார்கள் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.