பிரணாப் முகர்ஜிக்கு திடீரென பாரத் ரத்னா விருது ஏன்.. வங்காளிகளின் வாக்குகளை அள்ளவா ?
டெல்லி: இன்று நமது நாட்டின் 70 வது குடியரசுத்தின விழா கொண்டாடப்பட்ட நிலையில், 3 பேருக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரனாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் சேவகராகவும், பா.ஜ.க எம்.பியா-கவும் இருந்த நானாஜி தேஷ்முக் மற்றும் பா.ஜ.க சார்பில் 2004 ஆம் ஆண்டு எம்.பி தேர்தலில் போட்டியிட்ட பாடலாசிரியர் பூபென் ஹசாரிக்காவுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது அறிவிக்கப்பட்ட மூவரில் பிரணாப்முகர்ஜி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவருக்கு விருது அறிவிக்கப்பட்டவுடன் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், நமது காலத்தின் சிறந்த அரசியல்வாதி என்றும், தேசத்துக்கு தன்னலமின்றி உழைத்தவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
பாஜக அரசு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரனாபுக்கு பாரத ரத்னா விருது அறிவித்தது இப்போது சர்ச்சையை ஏறபடுத்தியுள்ளது, இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அறிவிப்புக்கு முன்னதாக பிரணாப்முகர்ஜி மற்றும் பாஜக உறவு நிலை எப்படி இருந்தது என்பதை பார்ப்பதும் இப்போது அவசியமாகிறது. முன்னதாக காங்கிரஸ் தலைவரான படேலுக்கு சிலை எழுப்பி விமர்சனங்களை சந்தித்த பாஜக அப்போதே பிரணாப் முகர்ஜிக்கும் தங்களை பிரனாபுக்கு வேண்டியவர்களாகவே காட்டிக் கொண்ட பல்வேறு நிகழ்வுகள் உண்டு.
காட்சி 01
கடந்த 2017 –ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் நடந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரணாப் முகர்ஜி பிரதமர் மோடியின் அணுகுமுறை அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. அவரது ஆற்றலும், கடினமான உழைக்கும் திறமையும் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.
உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் வெற்றிக்குப்பிறகு பேசிய பிரதமர் மோடி கட்சியினர் அனைவரும் பணிவுடன் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது இந்த பேச்சு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பிரச்சினைகளை கையாள்வதிலும் மோடி தனக்கென தனி பாணியை கடைப்பிடித்து வருகிறார். இதற்கு முன்பு பிரதமராக இருந்தவர்களில் பலரும் பாராளுமன்றத்தில் மிகுந்த அனுபவமிக்கவர்களாக இருந்தனர். ஆனால் குஜராத்தில் முதல்-மந்திரியாக இருந்து நேரடியாக மத்திய அரசுக்கு வந்த மோடி சிக்கலான வெளியுறவு விவகாரம், பொருளாதார விஷயங்கள் ஆகியவற்றை மிக விரைவாக கற்றுக்கொண்டு அதில் நிபுணத்துவம் பெற்றவராகி விட்டார். இதற்காக அவருக்குப்பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று புகழ்ந்து தள்ளியிருந்தார்.
காட்சி 02
2017 –ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று பிரணாப்முகர்ஜியை சந்தித்து பேசினார். அவருக்கு பிரணாப்முகர்ஜி விருந்து அளித்து உபசரித்தார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒருவர் ஜனாதிபதி மாளிகையில் விருந்து சாப்பிடுவது இதுவே முதல்முறையாகும் இச்சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்சி 03.
மேற்கண்ட நிகழ்வுகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல 2018 –ம் ஆண்டு ஜூன் மாதம் 7 ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 'சங்க சிக்ஷா வர்கா’ நிகழ்வின் 3-ம் ஆண்டு கூட்டம் ஜூன் 7-ம் தேதி நாக்பூர் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 600 ஊழியர்கள் கலந்து கொண்ட இறுதி நாள் நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதியும் பழுத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் கலந்து கொண்டார். காங்கிரசின் மேலிடத்தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை கடுமையாக சாடி வரும் நிலையில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன்சிங் ஆகியோருடன் நெருங்கிப் பழகி பணியாற்றிய பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்து கொண்டது அப்போதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா நீங்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டால் அங்கு எடுக்கப்படும் படங்கள்தான் மக்கள் மனதில் நிற்கும்’ நீங்கள் அங்கு பேசியதை மறந்து விடுவார்கள் என தனது தந்தையை எச்சரித்தார். ஆனால். இதையும் மீறி பிரணாப் முகர்ஜி அங்கு சென்றார்.
இப்படிப்பட்ட சர்ச்சைகளை கடந்து அதன் பின்னர் நீண்ட அமைதி நிலவியது. இந்நிலையில் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இந்தியா பொதுத் தேர்தலை சந்திக்கவேண்டியுள்ளது. இப்போது 2014 –ல் நிலவிய மோடி அலை என்று எதுவும் தற்போது இல்லை. பாஜகவுக்கு எதிரான கட்சிகள் இப்போது காங்கிரஸ் தலைமையிலும் காங்கிரஸ் தலைமையை விரும்பாத அதே நேரம் பாஜக எதிர்ப்பு மனநிலையிலும் உள்ளவர்கள் தனித்தனியாக மாநில அளவிலும் ஒருங்கினைந்துள்ளனர்.
உ.பி யில் அகிலேசும், மாயாவதியும் ஒருங்கிணைந்துள்ள நிலையில் மேற்கு வங்காளத்தில் மாயாவதி அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு மாநாடே நடத்தி விட்டார். ஆகவே அங்கு இப்போது பாஜக பயணிக்க எவ்வித வாகனங்களும் இல்லாத நிலையில் வங்காளிகளை கவர ஒரே வழியாக பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். தேர்தல் நெருங்க நெருங்க அரசியலில் அதிரடி காட்சிகள் அரங்கேறுவது இயல்புதானே.