பஞ்சாப் மாஜி முதல்வர் பியாந்த்சிங் கொலையாளி ரஜோனாவின் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்தது மத்திய அரசு
டெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் கொலையாளி ரஜோனாவின் தூக்கு தண்டனையை மத்திய அரசு ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது.
1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி பியாந்த்சிங் உட்பட 16 பேர் தற்கொலைப்படை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டனர். பப்பர் கல்சா எனும் சீக்கியர் தனி நாடு கோரும் அமைப்பு இத்தாக்குதலை நடத்தியது.
இதில் மனித வெடிகுண்டாக செயல்பட்டது தில்வார்சிங் என்ற பஞ்சாப் போலீஸ் அதிகாரி. அவருக்கு அடுத்ததாக பஞ்சாப் போலீஸ் கான்ஸ்டபிளான ரஜோனா 2-வது மனித வெடிகுண்டாக தயார் நிலையில் இருந்தார்.
ரஜோனா மீதான வழக்கில் 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந் தேதி சண்டிகர் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. ரஜோனாவை 2012 மார்ச் 31-ல் தூக்கிலிடவும் தேதி குறிக்கப்பட்டது.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது எல்ஜேபி- ஜார்க்கண்ட்டில் 50 தொகுதிகளில் தனித்து போட்டி
ஆனால் சீக்கியர் தலைவர்களின் அழுத்தங்களால் ரஜோனா தூக்கிலிடப்படவில்லை. இந்நிலையில் ரஜோனாவின் தூக்கு தண்டனையை மத்திய உள்துறை அமைச்சகம் ஆயுள் தண்டனையாக குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாட்டியாலா சிறையில் இருக்கும் ரஜோனா இனி ஆயுள் தண்டனையை அனுபவிப்பார்.