இனிப்புகள் வழங்கி பிறந்த நாள் கொண்டாடிய ராகுல்... வாழ்த்து கூறிய பிரதமர் மோடி
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது பிறந்த நாளையொட்டி செய்தியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு இன்று 48-வது வயது நிறைவு பெற்று 49-வது வயது பிறந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக அவர் தனது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடவில்லை. இருப்பினும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் காலை முதலே பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சோனியா, பிரியங்கா ஆகியோர் ராகுலை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.
இதனையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர்களும் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து அனுப்பினர். முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில், "#HappyBirthdayRahulGandhi" எனும் ஹேஷ்டாக் டிரெண்டிங் ஆக மாறியது.
Best wishes to Shri @RahulGandhi on his birthday. May he be blessed with good health and a long life.
— Narendra Modi (@narendramodi) 19 June 2019
பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், "ராகுல்காந்திக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ்ந்து சேவை செய்ய பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியை தரக்குறைவாக "காவலாளியே திருடன்" என்று ராகுல் விமர்சித்தார். இந்த விமர்சனம் நீதிமன்றம் வரை சென்று கண்டனத்திற்கு ஆளானது. அதே நேரம், மோடியும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். என்றாலும், அரசியல் நாகரீகத்தின்படி ராகுலுக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH: Congress President Rahul Gandhi distributes sweets among media personnel on his birthday today, at AICC Headquarters. pic.twitter.com/rnCVvaWcsC
— ANI (@ANI) 19 June 2019
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு ராகுல் காந்தி வரும் வழியில் செய்தி சேகரிக்க மற்றும் புகைப்படம், வீடியோ எடுக்க வந்திருந்த செய்தியாளர்களுக்கு தானே இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார். அவருக்கு செய்தியாளர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.