புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாரத் பந்த்- பல மாநிலங்களில் விவசாயிகள் உக்கிர போராட்டம்!
டெல்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல மாநிலங்களில் சாலை மறியல், வேளாண் சட்ட நகல்கள் எரிப்பு உள்ளிட்ட போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல மாநிலங்களில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இந்த போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
'பாரத் பந்த்'.. வேளாண் மசோதாவை எதிர்த்து வீதிக்கு வந்த விவசாயிகள்.. இன்று என்னவெல்லாம் நடக்கும்!
250 அமைப்புகளின் பாரத் பந்த்
இந்நிலையில் 250க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இன்று பாரத் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பாரத் பந்த் போராட்டத்துக்கு முழு ஆதரவு உள்ளது. விவசாயிகள் நெடுஞ்சாலைகளையும் ரயில் தண்டவாளங்களையும் மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் எருமைகள், டிராக்டர்கள்
பீகாரில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையில் சாலைகளில் டிராக்டர்களை இயக்கி போராட்டம் நடத்தப்பட்டது. பீகாரின் தர்பங்காவில் சாலைகளில் எருமைகளை ஓடவிட்டு ஆர்ஜேடி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். பஞ்சாப்பில் 36 விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் குதித்துள்ளன. ஜலந்தரில் அமிர்தசரஸ்- டெல்லி நெடுஞ்சாலையை விவசாயிகள் மறித்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கர்நாடகா போராட்டம்
இப்போராட்டங்களால் டெல்லி- சண்டிகர் இடையே பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. கர்நாடகா- தமிழ்நாடு நெடுஞ்சாலையில் பொம்மனஹல்லி அருகே கர்நாடகா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூர்- புனே நெடுஞ்சாலையில் நேற்று இரவு முதலே விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி- உபி எல்லையில் போலீஸ் குவிப்பு
விவசாயிகளின் போராட்டங்களால் டெல்லி- உத்தரப்பிரதேச எல்லையில் பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வட இந்தியாவில் பல ரயில் சேவைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
Recommended Video
திருச்சியில் போராட்டம்
தமிழகத்திலும் பல இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மண்டை ஓடுகள், தூக்கு கயிறு ஆகியவற்றுடன் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருச்சி- கரூர் நெடுஞ்சாலையை மறித்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தஞ்சை- திருச்சி சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.