மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு-பாரத் பந்த் போராட்டம் தொடங்கியது- எதிர்க்கட்சிகள் ஆதரவு
டெல்லி: மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று புதிய விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாய சங்கங்கள் இணைந்து அழைப்பு விடுத்த பாரத் பந்த் முழு அடைப்புப் போராட்டம் இன்று காலை 6 மணிக்கு நாடு முழுவதும் தொடங்கியது. இன்றைய பாரத் பந்த் போராட்டத்தால் பல்வேறு மாநிலங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட உள்ளது. இன்றைய போராட்டங்களின் போது அசம்பாவிதங்களைத் தடுக்க அனைத்து மாநிலங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Recommended Video
விவசாய துறையில் சீர்திருத்தம் செய்வதற்காக மூன்று விவசாய சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இந்த மூன்று விவசாய சட்டங்களும் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது; இந்த சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு விவசாய விளைநிலங்களை தாரைவார்த்துவிடும் என்பதால் விவசாயிகள் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பஞ்சாப், ஹரியானா, உ.பி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளில் அமர்ந்து தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 10 மாதங்களாக டெல்லி எல்லைகளில் கடும் குளிர், வெயில், மழைக்கு இடையே இப்போராட்டம் இடைவிடாமல் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு-பாரத் பந்த் போராட்டம் தொடங்கியது- எதிர்க்கட்சிகள் ஆதரவு
பேச்சுவார்த்தை தோல்வி
மத்திய அரசு போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியை தழுவின. மத்திய அரசானது, விவசாய சட்டங்களில் திருத்தம் கொண்டுவர தயார் என்கிறது. போராடும் விவசாயிகளோ சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்கின்றனர். இதனால் உச்சநீதிமன்றம் தலையிட்டு விவசாய சட்டங்களை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இதுவரை நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பல்வேறு காரணங்களால் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதேபோல் ஹரியானாவிலும் விவசாயிகள் நடத்திய போராட்டங்களை போலீசார் மிக கடுமையாக ஒடுக்கியது சர்ச்சையானது.
விவசாயிகளின் பாரத் பந்த்
டெல்லி விவசாயிகளின் இப்போராட்டத்துக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தையும் எதிர்க்கட்சிகள் முடக்கின. மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு கட்டப் போராட்டங்களும் இதுவரை நடத்தப்பட்டன. கடந்த மார்ச் 26-ந் தேதி நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக இன்று 2-வது முறையாக மீண்டும் பாரத் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. இன்று காலை 6 மணிக்கு பாரத் பந்த் முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியது. பாரத் பந்த் போராட்டத்தால் கேரளா, ஆந்திரா, ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஆதரவு
தமிழகத்திலும் காலை 6 மணிக்கு பாரத் பந்த் போராட்டம் தொடங்கியது. இப்போராட்டத்துக்கு ஆளும் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் பல இடங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களை நடத்த ஆளும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இன்று போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் திமுக இணைந்து நிற்கிறது என அக்கட்சியின் மாநில விவசாய பிரிவு செயலாளர் என்.கே.கே.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் போராட்டம்
ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி இப்போராட்டத்துக்கு ஆதரவை தெரிவித்திருக்கிறது. ஆந்திராவில் நள்ளிரவு முதலே அரசு பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கர்நாடகாவில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் இன்றைய போராட்டத்துக்கு ஆதரவை தெரிவித்துள்ளன. கர்நாடகா விவசாய சங்கங்கள் நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.
கேரளாவில் இடதுசாரிகள்-காங். ஆதரவு
கேரளாவில் ஆளும் இடதுசாரிகள் கூட்டணியும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் இணைந்து முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்கின்றன. இதனால் கேரளாவில் பாரத் பந்த் போராட்டம் முழு அளவில் நடைபெறும். கேரளாவில் அனைத்து போக்குவரத்து சேவைகளும் முற்றாக முடங்கி உள்ளன. கேரளாவில் பாஜகவின் தொழிற்சங்கமும் இன்றைய போராட்டத்தில் பங்கேற்கும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டத்தை முன்னிட்டு தனியார் பேருந்துகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற மாநில நிலவரம்
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணியும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆகையால் மகாராஷ்டிராவிலும் இன்றைய பாரத் பந்த் போராட்டம் வெற்றிகரமாக நடைபெறும். மகாராஷ்டிராவில் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டங்கள் நடத்த விவசாய அமைப்புகள் திட்டமிட்டிருக்கின்றன. ஒடிஷாவில் பாரத் பந்த் போராட்டத்தை முன்னிட்டு இன்று காலை 6 மணி முதல் அனைத்து அரசு பேருந்துகள் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பீகாரில் ஆர்ஜேடி தலைமையிலான கூட்டணி கட்சிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. உ.பி.யி. எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியாவை பாரத் பந்த் போராட்டத்தில் கை கோர்த்துள்ளன. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ், சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றன. டெல்லியில் பாரத் பந்த் போராட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வங்கி அதிகாரிகள் ஆதரவு
பாரத் பந்த் போராட்டத்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவை தெரிவித்துள்ளன. அகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனமும் இன்றைய போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருக்கிறது. இன்றைய பாரத் பந்த் போராட்டத்தின் போது அத்தியாவசிய பொருட்கள் சேவைகளுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்து கடைகள், நிவாரண மீட்புப் பணிள் ஆகியவை வழக்கம் போல நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.