தொடங்கியது பந்த்.. ஸ்தம்பித்த மாநிலங்கள்.. மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் வேலைநிறுத்தம்!
மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
டெல்லி: மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. 10 தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் நாளுக்கு நாள் பொருளாதார மந்தநிலை அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளுடன் மத்திய அரசு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் தொழிற் சங்கங்கள் சார்பாக அதிரடியாக நடத்தப்படுகிறது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 25 கோடி பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
போராட்டம்
தமிழகம், கேரளா, ஆந்திரா, டெல்லி, குஜராத், மேற்கு வங்கம் என்று அனைத்து மாநிலங்களிலும் இந்த போராட்டம் நடக்கிறது. தொழிற்சங்க கூட்டமைப்புகள் நடத்தும் இந்த திடீர் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன காரணம்
வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, அடிப்படை ஊதியத்தை அதிகரித்தல் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இது தொடர்பாக நடந்து பேச்சுவார்த்தைகள் பலன் அளிக்காததால் இந்த போராட்டம் நடந்து வருகிறது.
மாநில பேருந்துகள்
இதை வங்கி மற்றும் பேருந்து ஊழியர்கள் முன்னின்று நடத்துவதால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுக்க இதனால் இன்று வங்கிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம்
இந்த போராட்டம் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பேருந்துகள் இயங்கவில்லை. ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் பேருந்துகள் இயங்கவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் போராட்டத்தில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்ன நிலை
கேரளாவில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆதரவால் அரசுபேருந்துகள் நள்ளிரவு 12 மணி முதல் இயங்கவில்லை. தமிழகத்தில் பேருந்துகள் இயங்கி வருகிறது. ஆனால் கேரளா செல்லும் பேருந்துகள் மட்டும் எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் கர்நாடகா செல்லும் தமிழக பேருந்துகளும் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது.