நாளை பாரத் பந்த்.. பல்வேறு தொழிற்சங்கங்களின் 25 கோடி பேர் பங்கேற்பு.. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்
டெல்லி: தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளுடன் செயல்படும் மத்திய அரசை கண்டித்து நாளை புதன்கிழமை நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக தொழிற் சங்கங்கள் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 25 கோடி பேர் பங்கேற்பார்கள் என்று தொழிற்சங்க கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, அடிப்படை ஊதியத்தை அதிகரித்தல் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் தொழிற் சங்கக் கூட்டமைப்புகள் கடந்த வாரம், தொழிலாளர் நலத்துறைக்கான, மத்திய இணை அமைச்சர் சந்தோஷ் கங்வாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தின.
ஆனால், தொழிற்சங்கம் முன்வைத்த 14 அம்ச கோரிக்கைகளில் ஒன்றைக்கூட சரி செய்வதற்கான, உறுதிமொழியை அமைச்சர் வழங்கவில்லை என்று தொழிற் சங்கங்கள் தரப்பு தங்கள் கூட்டறிக்கையில் தெரிவித்திருந்தது. எனவேதான், பாரத் பந்த் நடத்த அவை அழைப்பு விடுத்துள்ளன.
இயல்பு வாழ்க்கை
அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 25 கோடி பேர் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். போக்குவரத்து, வங்கி வர்த்தகம் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வேலை நிறுத்த பாதிப்பு அதிகமாக இருக்க கூடும் என்கிறார்கள்.
கோரிக்கைகள்
தொழிற்சங்கங்கள் மொத்தம் 14 கோரிக்கைகளை முன்வைக்கின்றன. அதில் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று, தொழிலாளர் துறை சீர்திருத்தங்களை அரசு கைவிட வேண்டும் என்பதாகும். குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் ரூ .21,000-ரூ.24,000 என உயர்த்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை நிறுத்துதல், வங்கிகளை கட்டாயமாக இணைப்பதை நிறுத்துதல் மற்றும் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), குடிமக்கள் தேசிய பதிவு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பிஆர்) ஆகியவற்றை நீக்குதல், வேலைவாய்ப்பின்மை பிரச்சினைக்கு தீர்வு காணுதல் போன்றவை முக்கிய கோரிக்கைகளாகும்.
ஆதரவு தரும் அமைப்புகள்
அனைத்திந்திய ஐக்கிய தொழிற்சங்க மையம் (AIUTUC), இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU), அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC), ஹிந்த் மஜ்தூர் சபா (HMS), சுயதொழில் மகளிர் சங்கம் (SEWA) ), அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சில் (AICCTU), தொழிலாளர் முற்போக்கு கூட்டமைப்பு (LPF), ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் (UTUC), இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) மற்றும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் (TUCC) ஆகிய தொழிற்சங்கங்கள், போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.
வங்கி சங்கங்கள்
6 வங்கித் துறை தொழிற்சங்கங்களும், போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளதால், வங்கி சேவைகளும் பாதிக்கப்படும். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA), அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கம் (AIBOA), இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (BEFI), இந்திய தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (INBEF), இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ் ஆகியவை, போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.
குற்றச்சாட்டு
இதுகுறித்து இந்திய தொழிற் சங்க பொதுச்செயலாளர் டப்பான் சென், கூறுகையில், மத்திய அரசு தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படும் இந்த அரசு சாதாரண தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொள்ளவில்லை. எனவே, எங்களது பலத்தை ஜனவரி 8ம் தேதி காட்டுவோம் என்றார். ஆர்எஸ்எஸ் ஆதரவு வர்த்தக கூட்டமைப்புகள் இந்த பாரத் பந்த்திற்கு ஆதரவு அளிக்கவில்லை.
விடுதலை சிறுத்தைகள்
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், தொல்.திருமாவளவன் இன்று கூறுகையில், இந்தியா முழுவதும் ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும். பொருளாதாரம் மிகப் பெரிய நெருக்கடியில் உள்ளது. இந்திய பொருளாதாரம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது. கல்வியை காவி மயம் ஆக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. மோடி அரசின் மக்கள்விரோத கொள்கைகளை எதிர்த்து பல்வேறு தொழிற்சங்கஅமைப்புகள் சார்பில் நாளை நடைபெறும் நாடு தழுவியபொது வேலை நிறுத்தத்துக்கு விசிக ஆதரவு அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.