நாளை பாரத் பந்த்.. நாடு முழுக்க இந்த 2 சேவைகள் பெரிதும் பாதிக்கப்படும்.. ரெடியா இருங்க மக்களே
டெல்லி: பாரத் பந்த் காரணமாக நாளை வங்கி சேவைகள் மற்றும் சில மாநிலங்களில் பொதுப் போக்குவரத்து பாதிக்கப்படும்.
வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, அடிப்படை ஊதியத்தை அதிகரித்தல் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் தொழிற் சங்கக் கூட்டமைப்புகள் கடந்த வாரம், தொழிலாளர் நலத்துறைக்கான, மத்திய இணை அமைச்சர் சந்தோஷ் கங்வாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தின.
ஆனால், தொழிற்சங்கம் முன்வைத்த 14 அம்ச கோரிக்கைகளில் ஒன்றைக்கூட சரி செய்வதற்கான, உறுதிமொழியை அமைச்சர் வழங்கவில்லை என்று தொழிற் சங்கங்கள் தரப்பு தங்கள் கூட்டறிக்கையில் தெரிவித்திருந்தது. எனவே, நாளை பாரத் பந்த் நடத்த அவை அழைப்பு விடுத்துள்ளன.
இதன் காரணமாக நாளை, வங்கி சேவைகளை பொறுத்தளவில், ஏடிஎம் சேவைகள், டெபாசிட் மற்றும் பணம் பெறுதல், காசோலை பரிவர்த்தனை போன்றவை பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தனியார் துறை வங்கிகளில் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. இந்த நாடு தழுவிய வேலைநிறுத்த அழைப்பின் காரணமாக வங்கி, போக்குவரத்து மற்றும் பிற முக்கிய சேவைகளும் பல மாநிலங்களில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் தொழிற்சங்கங்களில் அதன் வங்கி ஊழியர்களின் உறுப்பினர் எண்ணிக்கை மிகக் குறைவு, எனவே வங்கிகளின் செயல்பாட்டில் வேலைநிறுத்தத்தின் தாக்கம் மிகக் குறைவாக இருக்கும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது.
ஜிடிபி வளர்ச்சி 5% மட்டுமே.. அரசு டேட்டாவில் அதிர்ச்சி தகவல்.. வேலையில்லா திண்டாட்டம் பெருக வாய்ப்பு
இதனிடையே, மத்திய தொழிற்சங்கங்கள் 24 மணிநேர நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், விளைவுகள் ஏற்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
"எந்தவொரு வடிவத்திலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் எந்தவொரு ஊழியரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும், இது ஊதியக் குறைப்பைத் தவிர, பொருத்தமான ஒழுக்க நடவடிக்கைகளையும் உள்ளடக்கும்" என்று பணியாளர் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தங்கள் அல்லது போராட்டங்களில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்கு, அனுமதியில்லை என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அனைத்து மூத்த அதிகாரிகளுக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எந்த விடுப்பையும் அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.