பாரத பந்த் : விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டின் பல பகுதிகளில் ரயில் மறியல் போராட்டம்
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி: பாரத பந்த் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக நாட்டின் பல பகுதிகளில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மகாராஷ்டிராவில் ரயில் மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். ஒடிசா, ஆந்திரா என மாநிலத்தின் பல பகுதிகளிலும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்து மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, கடந்த 26ம் தேதி முதல், டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3 சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டுமென்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, 6வது கட்ட பேச்சுவார்த்தை நாளை 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் சார்பில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, சிவசேனா, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஜம்முகாஷ்மீரின் குப்கர் கூட்டணி, மக்கள் நீதி மய்யம், கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
பாரத பந்த்
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு மாநில அரசுகள் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. பல்வேறு தொழிற்சங்கங்களும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.
கடைகள் அடைப்பு
அந்த வகையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தற்போது முதலே எதிர்க்கட்சிகளும், பல்வேறு தொழிற்சங்கங்களும் தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளன. நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில்,சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
|
ரயில் மறியல் கைது
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரத் பந்த் ஆதரிக்கும் வகையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. புல்டனா மாவட்டத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
|
ஓடிசாவில் மறியல்
அதேபோல், ஒடிசா மாநிலத்தில் இடதுசாரிகள், வியாபார சங்கங்கள், விவசாய சங்கங்கள் இணைந்து புவனேஷ்வர் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
ஆந்திரா மாநிலத்திலும் விஜயவாடா நகரில் இடதுசாரிகள் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆந்திராவின் ஏ.ஐ.சி.டி.யு. உள்ளிட்ட இடதுசாரிகள் கலந்து கொண்டு வேளாண் சட்டத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள போராட்டத்தில் ஈடுபட்டனர்.