இன்று பாரத் பந்த்.. தமிழகத்தில் பஸ், ரயில் ஓட நடவடிக்கை, ஆட்டோக்கள் ஓடாது.. 1 லட்சம் போலீஸ் குவிப்பு
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக இன்று பாரத் பந்த் நடைபெறுகிறது. விவசாயிகள் போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இதையடுத்து, தமிழகத்தில் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பெரும்பாலான மக்களுக்கு இடையூறு இல்லாமல் பந்த் நடத்துகிறார்கள் விவசாயிகள்.
சமீபத்தில், 3 விவசாய சட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றியது.
இந்த விவசாய சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை எதிர்த்தும், அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் டெல்லியில் இன்றுடன் 13வது நாளாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளுடன் மத்திய அரசு அடுத்தடுத்து நடத்திய 5 சுற்று, பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. 3 விவசாய சட்டங்களும் ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் அனைவரும் தீவிரமாக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.
இதற்கிடையில் 3 விவசாய சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் 8ம் தேதியான இன்று முழு அடைப்பு போராட்டத்தை டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் முழு அடைப்புக்கு ஆதரவளிக்க முடியவில்லை என கேரளா மாநிலத்தில் ஆளும் அரசாக இருக்கும் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்திருக்கிறது.
பாரத் பந்த்துக்கு தொ.மு.ச. உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் சார்பில் ஆதரவு அளிக்கப்படுகின்றன. அந்த தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பணிக்கு வரமாட்டார்கள். இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபடுவார்கள்.
அதேவேளை போக்குவரத்துக்கு எந்த வித இடையூறும் ஏற்படகூடாது என்பதில் போக்குவரத்து கழகம் உறுதி தெரிவிக்கிறது. தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் 22 ஆயிரம் மாநகர பஸ்கள், அரசு விரைவு பஸ்கள், நகர பஸ்கள் என அனைத்து பஸ்களும் இன்று வழக்கம்போலவே இயங்கும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்கிறார்கள் போக்குவரத்து கழக அதிகாரிகள்.
ஆனால் இன்று பகலில் ஆம்னி பஸ் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் ரயில் போக்குவரத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றே தெரிகிறது. வழக்கமான கால அட்டவணைப்படி ரயில்கள் இன்று வழக்கம்போலவே இயக்கப்படும். இன்று கடைகள் வழக்கம்போலவே திறக்கப்பட்டிருக்கும் என்றே தெரிகிறது.
ஆட்டோ டிரைவர்களில் 80 சதவீதம் பேர் தொழிற்சங்கங்களில் இணைந்திருக்கிறார்கள். எனவே, இன்று ஆட்டோக்கள் பெரும்பாலும் ஓடாது. இயக்கப்படும் சில ஆட்டோக்களும் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டு நிர்ப்பந்திக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
விவசாயிகள் போராட்டம்... நாம் தமிழர் கட்சி இறுதிவரை துணை நிற்கும்... சீமான் அறிவிப்பு..!
அத்தியாவசிய சேவைகளை உறுதி செய்ய, தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.