கோவாக்சின் தடுப்பூசி போட்டு பக்க விளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு நிச்சயம்.. பாரத் பயோடெக்!
டெல்லி: கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்க விளைவு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் மெகா திட்டத்தை நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து உருவாக்கிய கோவாக்சின் எனும் தடுப்பூசியின் முதல் டோஸ் நேற்று சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது.
முன்னதாக கோவாக்சின் தடுப்பூசியால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதற்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என சுகாதார ஊழியருக்கு பாரத் பயோடெக் நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.
இது தொடர்பான படிவத்தில் அவர்கள் கையெழுத்திட்ட பின்னரே அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அந்த படிவத்தில் கோவாக்சின் கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்யும் திறனை முதல் மற்றும் 2ஆம் கட்ட சோதனையில் நிரூபித்துள்ளது.
எனினும் 3ஆம் கட்ட சோதனை செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு ஏதேனும் பாதகமான நிகழ்வு ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு நியமித்த மருத்துவமனையில் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தரமான பராமரிப்பு வழங்கப்படும் என பயோடெக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் தடுப்பூசி போட்டவர்களில் 51 பேருக்கு பக்க விளைவு.. ஐசியூவில் ஒருவர் அனுமதி
ஒரு வேளை மிகவும் மோசமான பக்க விளைவு அதுவும் தடுப்பூசியால் ஏற்பட்டது என நிரூபிக்கப்பட்டால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.