கோவாக்சின் தடுப்பு மருந்து போட்டும் ஹரியானா அமைச்சருக்கு கொரோனா எப்படி?.. விளக்கும் பாரத் பயோடெக்!
டெல்லி: இரு டோஸ்கள் கோவாக்சின் போட்டால் மட்டுமே உடலில் செயல்திறன் அதிகரிக்கும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. நவம்பர் 20-ஆம் தேதி கோவாக்சின் முதல் டோஸ் போடப்பட்ட ஹரியானா அமைச்சர் அனில் விஜிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கியது.
இந்த மருந்தை மனிதர்கள் செலுத்தி பரிசோதிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை கடந்த நவம்பர் 20-ஆம் தேதி ஹரியானாவில் தொடங்கியது. முதல் தடுப்பு மருந்தை ஹரியானா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜிக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது.
கோவாக்சின் தடுப்பு மருந்து போட்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா வைரஸ்
தடுப்பு மருந்து
இந்த நிலையில் அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதை அமைச்சர் உறுதி செய்தார். தடுப்பு மருந்து போட்டும் அமைச்சருக்கு கொரோனா வந்தது எப்படி என்றும் அந்த மருந்தின் செயல்திறன் குறித்தும் இணையதளத்தில் பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன.
சோதனை
இதுகுறித்து கோவாக்சின் தடுப்பு மருந்தை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கோவாக்சின் தடுப்பு மருந்து இரண்டு எடுத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் மனிதர்களுக்கு சோதனை செய்யப்படுகிறது.
14 நாட்கள்
முதல் டோஸ் போட்டு 28 நாட்கள் இடைவெளிவிட்டு இரண்டாவது டோஸ் போடப்பட வேண்டும். இரண்டாவது டோஸ் போட்டு 14 நாட்கள் கழித்தே தடுப்பூசி பலனை தரும். இரண்டு டோஸ்களையும் போட்டு கொண்ட பிறகே பலன் தரும் வகையிலேயே கோவாக்சின் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹரியானா அமைச்சருக்கு டிசம்பர் 18-ஆம் தேதி இரண்டாவது டோஸ் போட வேண்டியிருந்தது.
அமைச்சர் கருத்து
இதை அவரிடம் மருத்துவர்களும் தெளிவாக கூறிவிட்டனர் என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அனில் விஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இரு டோஸ்களையும் போட்டு 14 நாட்களுக்கு பிறகே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என மருத்துவர்கள் என்னிடம் கூறியிருந்தனர். நான் ஒரு டோஸ் மட்டுமே போட்டுக் கொண்டேன். எனினும் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்ட நிலையில் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக அமைச்சர் அனில் தெரிவித்துள்ளார்.