தமிழகத்தில்தான் கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை குறைவு- ஒப்புதல் படிவத்தை ஏற்க தயக்கம்
டெல்லி: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை போட்டவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கான ஒப்புதல் படிவத்தில் பலரும் கையெழுத்திட தயங்குவதுதான் காரணம் எனவும் கூறப்படுகிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் நாடு முழுவதும் போடப்படுகின்றன.
கோவாக்சின், கோவிஷீல்டு இந்தியாவுக்கு வந்தது எப்படி? .. தடுப்பு மருந்துகளின் தொழில்நுட்பம் என்ன?
கோவாக்சினுக்கு எதிர்ப்பு
இதில் கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையின் 3-ம் கட்ட முடிவுகள் பகிரங்கப்படுத்தாத நிலையில் அதை பொதுமக்களுக்கு போடக் கூடாது என்பது எதிர்ப்புக்கு காரணம்.
குறைவான எண்ணிக்கை
ஜனவரி 16-ந் தேதி முதல் நாளில் நாடு முழுவதும் 1.91 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்டனர். ஆனால் தெலுங்கானா, தமிழகம் மற்றும் பீகார் மாநிலங்களில்தான் பதிவு செய்தவர்களில் 50%க்கும் குறைவானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
தமிழகத்தில் கோவாக்சின் குறைவு
தமிழகத்தில் முதல் நாளில் 600 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 99 பேருக்குதான் போடப்பட்டது. 2-வது நாளான ஞாயிற்றுக்கிழமை கூட பிற்பகல் வரை 90 பேர் மட்டுமே கோவாக்சின் தடுப்பூசியை தமிழகத்தில் போட்டுக் கொண்டனர். தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கான ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட பலரும் தயக்கம் தெரிவித்துள்ளது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
2 நாட்கள் நிலவரம்
நாடு முழுவதும் 2 நாட்களில் மட்டும் 2.24 லட்சம்ம் பேர் கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளனர். இவர்களில் 447 பேருக்கு மட்டுமே ஒவ்வாமை இருந்தது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.