பாரத ரத்னா, பத்ம விருதுகளை பெயருடன் இணைத்து பயன்படுத்த தடை… மத்திய அரசு அறிவிப்பு
Recommended Video
டெல்லி:பாரத ரத்னா, பத்ம விருதுகளை தமது பெயருடன் இணைத்து யாரும் பயன்படுத்தினால் அவற்றை திரும்ப பெற நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
லோக்சபாவில் இது தொடர்பாக கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்கா ராம் அஹிர் விளக்கம் அளித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய தேசிய விருதுகளை அரசியல்சாசன விதிகளின் படி விருது பெற்றவர்கள் தங்கள் பெயருக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ விருதுகளின் பெயர்களை எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது. அப்படி தவறாக பயன்படுத்தினால், விருது பெற்றவர் அந்த உரிமையை இழந்தவர் ஆகிறார்.
குடியரசு தலைவரால் அந்த விருதுகளை ரத்து செய்யவோ, நீக்கவோ முடியும். மேலும் விருது பெற்றவர்களின் பெயர்கள் அதற்கான பதிவேட்டில் இருந்து நீக்கப்படும். அதன் பிறகு... அந்த விருதுகளை சம்பந்தப்பட்டவர்கள் திரும்ப ஒப்படைக்க நேரிடும்.
விருது பெற்ற ஒவ்வொருவரும் இதனை கடைபிடிக்க வேண்டும். எனவே விருது பெற்றவர்கள் பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ விருதுகளை சேர்க்க வேண்டாம்.
1955-ம் ஆண்டில் இருந்து இதுவரை 38 பேருக்கு பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன. 307 பேருக்கு பத்ம விபூஷண், 1,255 பேருக்கு பத்மபூஷண், 3,005 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டு உள்ளது.