நானாஜி தேஷ்முக், பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு பாரத் ரத்னா வழங்கப்பட்டதன் பின்னணி என்ன?
டெல்லி நேர்மையின்மையும், அரசியல் பின்னணியும் பின்னிப் பிணைந்தே இருப்பதால் இப்போதெல்லாம் தகுதி உரியவர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் கூட, வழங்கப்படுவதில்லை மாறாக வாங்கப்படுகிறது என்ற குற்றசாற்று பரவலாக உண்டு.
நாட்டின் 70 வது குடியரசுத் தினம் கொண்டாடப்பட்டதையடுத்து பத்ம விருதுகளும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு பாரத் ரத்னா விருதும் அறிவிக்கப்பட்டது. இப்போது இந்த அறிவிப்பும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த விருதுகளுக்கு அறிவிக்கப்பட்டவர்கள் தகுதியானவர்களா இல்லையா என்ற கேள்வியை விட அறிவிக்கப்பட்டுள்ளநேரம் இப்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த விருதுகள் வழங்கப்படுவது தவறான புரிதலை ஏற்படுத்தும் என்ற காரணத்தை கூறி ஓடிஸா முதல்வரின் சகோதரியும் எழுத்தாளருமான கீதா மேத்தா தனக்கு அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்துள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக தற்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ள நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதும் இப்போது சர்ச்சையை சந்தித்துள்ளது. பாரதத்தின் ரத்னம் என்ற பொருளில் வரும் இந்த விருது இந்த வருடம் 3 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி, ஆர் எஸ் எஸ் எஸ் தலைவர்களுள் ஒருவரான நானாஜி தேஷ்முக் மற்றும் இசைக் கலைஞர் பூபன் ஹசாரிகா ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குதான் சர்ச்சையே ஆரம்பிக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பிரணாப்முகர்ஜிக்கு பாரத் ரத்னா அறிவிக்கப்பட்டதன் பின்னணியை சற்று ஆராய்ந்தோம் என்றால் அவர் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் சின் கூட்டத்தில் கலந்து கொண்டது ஊரறிந்த ரகசியம். அதோடு பிரதமர் மோடி இவரைப் புகழ்வதும் பிரணாப் மோடியை புகழ்வதும் அடிக்கடி நடைபெறும் நிகழ்வுகளாகிப் போனது.
மறைவிற்குப் பிறகு விருது பெறுபவர்கள் பட்டியலில் ஆர் எஸ் எஸ் எஸ் தலைவர்களுள் ஒருவரான நானாஜி தேஷ்முக்கிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு விருது அறிவிக்கப்பட்டதுமே ஆர் எஸ் எஸ் சின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் ஹர்ஷ வரதன் ஆர் எஸ் எஸ் எஸ்ஸை வடிவமைத்த ஒரு நபருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பது உண்மையில் உயர்வானது என்று கூறியிருப்பது கவனிக்கத் தக்கது.
திருமாவளவன் கண்டனம்
நானாஜி தேஷ்முக், ஜனசங்கம் என்ற அரசியல் கட்சியைஆர்.எஸ்.எஸ் துவக்கிய போது அதை மக்களிடம் பரப்புவதில் முக்கியபங்காற்றியவர். 2002 ஆம் ஆண்டு குஜாரத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகமிகப்பெரிய கலவரம் நடத்தப்பட்ட போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்தநானாஜி தேஷ்முக் அதைக் கண்டிக்கவில்லை. குஜராத் முதல்வராக இருந்த மோடியை மறைமுகமாக ஆதரித்தார். 1984ஆம் ஆண்டு தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராகநடந்த கலவரத்தை அவர் ஆதரித்ததாகக் குற்றச்சாட்டுகள் உண்டு. அத்தகையை ஒருவருக்கு பாரத ரத்னா விருதுவழங்குவது அந்தவிருது உருவாக்கப்பட்ட நோக்கத்துக்கே எதிரானதாகும்.
இந்தியநாட்டின் கல்வியை சனாதன மயப்படுத்த வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்நோக்கங்களில் ஒன்று. அதை செயல்படுத்தும் விதமாக நானாஜி தேஷ்முக்கால் 1952ல் உருவாக்கப்பட்டது தான் 'சரஸ்வதி சிசுமந்திர் ' என்னும் பள்ளி முறையாகும். அங்கு ஆன்மீகக் கல்விஎன்ற பெயரில் சனாதனக் கொள்கைகளே போதிக்கப்படுகின்றன. அதற்கு பாதை அமைத்துத் தந்தவர். ஆட்சி அதிகாரம் கையில்இருப்பதால் அதை வைத்துக்கொண்டு ஆர்எஸ்எஸ்-இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டுள்ளது என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அதே வேளையில் அவர் கூறியிருக்கும் இன்னொரு கருத்தும் கவனிக்கத்தக்கது. தற்போது பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள இந்த மூவரையும் சேர்த்து இதுவரை நம் நாட்டில் 48 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் தலித் சமூகத்தை சேர்ந்தவர் அம்பேத்கார் மட்டுமே. இந்திய அரசியல் சாசன நிர்ணய சபையின் வடிவமைப்புக் குழு தலைவராக இருந்த அவருக்கு 1990-ம் ஆண்டுதான் வழங்கப்பட்டது. இந்த விருது கூட கட்டாயத்தின் பேரில் தான் அம்பேத்கருக்கு வழங்கப்பட்டதாக அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தாஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைஸி குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒவைஸி, கூட்டத்தில் பேசிய ஒவைஸி, "இதுவரை பாரத ரத்னா விருது பெற்றவர்களில் எத்தனை பேர் தலித், ஆதிவாசி, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஏழைகள், எத்தனை பேர் பிராமணர்கள், உயர்சாதியினர் என்று உங்களால் சொல்ல முடியுமா? கட்டாயத்தின் பேரில்தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதே தவிர மனமுவந்து அவருக்கு அந்த விருது வழங்கப்படவில்லை" என்றார்.
ஆக, விருதுகளும் இந்த நாட்டில் வில்லங்கமாகி வருவதை என்னவென்று சொல்வது.