ஜாமீனில் வந்த மறுநாளே பேரணி.. ஜம்மா மசூதிக்கு பெரும் படையோடு சென்ற பீம் ஆர்மி ஆசாத்.. ராவணன்!
டெல்லி: ஜாமீனில் வெளியே வந்துள்ள பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் இன்று பெரும் படையோடு ஜம்மா மசூதி சென்று அங்கே மரியாதை செய்தார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி கைதான பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்திற்கு ஜாமீன் வழக்கில் டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனால் நேற்று இரவு அவர் விடுதலை செய்யப்பட்டார். டெல்லியில் ஜம்மா மசூதியில் கடந்த டிசம்பர் 21ம் தேதி இவர் போராட்டம் நடத்தினார். இதனால் இவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சந்திரசேகர் ஆசாத்திற்கு ஜாமீன் வழக்கில் டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவருக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 16 வரை அவர் எங்கும் போராட்டம் செய்ய கூடாது. அதேபோல் பிப்ரவரி 16 வரை அவர் டெல்லிக்கு வர கூடாது. டெல்லி தேர்தலுக்கு இடைஞ்சல் விளைவிக்க கூடாது. அவர் 25 ஆயிரம் ரூபாய் பிணை தொகை செலுத்த வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
எப்படி அழைக்கிறார்கள்
சந்திரசேகர் ஆசாத்தை அவரது ஆதரவாளர்கள், பொதுமக்கள் பலர் ராவணன் என்றுதான் அழைக்கிறார்கள். தென்னிந்தியாவில் புரட்சி செய்யும் மக்களை ராவணன் என்று அழைப்பது சாதாரண விஷயம். ஆனால் வட இந்தியாவில் இப்படி ஒருவரை அழைப்பது மிகவும் புதியது. தினம் தினம் இவருக்கான ஆதரவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
நீதிமன்றம்
இந்த நிலையில் நீதிமன்ற அனுமதியின் படி இன்று அவர் ஜம்மா மசூதிக்கு சென்றார். இன்று இரவு அவர் டெல்லியை விட்டு செல்ல வேண்டும். அதற்கு முன் அவர் ஜம்மா மசூதியில், மரியாதை செலுத்தினார். ஜம்மா மசூதி வாசலில் நின்று மக்களோடு மக்களாக கோஷம் எழுப்பினார்.
பேரணி
செங்கோட்டையில் இருக்கும் ஜம்மா மசூதி வரை, இவர் பல்லாயிரக்கணக்கான மக்களோடு, பெரும் பேரணி மேற்கொண்டார். இவரோடு வந்த மக்கள் எல்லோரும் சிஏஏ, எனஆர்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். அசாதி முழக்கங்களை அவர்கள் எழுப்பினார்கள்.
வேண்டாம்
மசூதியின் உள்ளே இருக்கும், மைக்கில் இருந்து, சிலர் போராட்டம் செய்ய வேண்டாம். அமைதியாக பேரணி நடத்துங்கள். கலவரம் எதுவும் வேண்டாம் என்று அறிவுறுத்திக் கொண்டு இருந்தனர். இந்த பேரணிக்கு முன் சந்திரசேகர் ஆசாத், வால்மிகி கோவிலில் தரிசனம் செய்தார்;. அதன்பின் அவர் குருத்வாரா கோவில் ஒன்றுக்கும், சர்ச் ஒன்றுக்கும் செல்ல இருக்கிறார்.
போலீஸ்
மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக அவர் இப்படி செய்ய உள்ளார். இன்று அவர் உத்தர பிரதேசம் செல்ல வேண்டும். இதனால் பாதுகாப்பிற்காக சந்திரசேகர் ஆசாத் உடன் எப்போதும் 5 போலீசார் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.