டெல்லி சலோ... விவசாயிகள் போராட்டத்தில் இணைந்த பீம் ஆர்மி, ஜேஎன்யூ மாணவர்கள்
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டங்களில் பீம் ஆர்மி, ஜேஎன்யூ மாணவர்களும் இணைந்துள்ளனர்.
மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற கோரிதான் டெல்லி சலோ போராட்டம் நடத்தப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர்.
இதனால் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மத்திய அரசு. இது தொடர்பாக பாஜக தலைவர் ஜேபி நட்டா இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பீம் ஆர்மி, ஜேஎன்யூ மாணவர்களும் இணைந்துள்ளனர். மேலும் கொல்கத்தா, அமிர்தசரஸ் உள்ளிட்ட பல இடங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்றன.
தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களிலும் டெல்லி விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.