விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை.. உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து பூபேந்தர் சிங் திடீர் விலகல்.!
டெல்லி: விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து பூபேந்தர் சிங் மான் விலகிக் கொண்டார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி தலைநகர் டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாய பெருங்குடி மக்கள் போராடி வருகின்றனர். கடும் குளிர் மற்றும் வயது முதிர்வு காரணமாக போராட்டக்களத்தில் இதுவரை 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விவசாயிகள் போராட்டத்தை நிறுத்த இதுவரை மத்திய அரசு ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிருப்தி தெரிவித்திருந்தது. மேலும், வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்ததோடு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது.
அவ்வாறு அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட குழுவில் பூபேந்தர் சிங் மானும் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து தாம் விலகிக் கொள்வதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் பூபேந்தர் சிங் மான். தற்போது நிலவும் சூழல் மற்றும் மக்கள் கருத்தை கருத்தில் கொண்டு தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக பூபேந்தர் சிங் மான் தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழர்களுக்கு வணக்கம்.. இங்கிலாந்து பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து!
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் தன்னை பரிந்துரைத்து இணைத்ததற்காக உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், விவசாயிகளுக்கு எப்போதும் துணை நிற்பேன் எனவும் பூபேந்திர் சிங் மான் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் நலனுக்கு குந்தகம் ஏற்படாத வகையில் தாம் செயல்பட விரும்புவதாகவும் இதற்காக எந்தவொரு தியாகத்தை செய்யவும் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் குழு அமைத்து முழுமையாக மூன்று நாட்கள் கூட முடிவடையாத நிலையில் அந்தக் குழுவில் இருந்து ஒருவர் வெளியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.