செங்கோட்டை மட்டுமல்ல.. டெல்லி போலீஸ் தலைமை அலுவலகத்திலும் விவசாயிகள்.. குவியும் டிராக்டர்கள்
டெல்லி: டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தையும் விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். ஐடிஓ பகுதியில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகம் கட்டிடத்தை சுற்றிலும் டிராக்டர்களுடன் குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. ஏற்கனவே செங்கோட்டை பகுதி முழுவதிலும் விவசாயிகள் குவிந்துள்ளதால் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.
குடியரசு தினத்தையொட்டி டிராக்டர் பேரணியில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என்று டெல்லியில் நீண்ட நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் அமைப்பினர் அறைகூவல் விடுத்திருந்தனர்.
அதன் பேரில் இந்தியாவின் பல மாநில விவசாயிகளும் டிராக்டர்களுடன் டெல்லிக்கு படையெடுத்தனர். சாரைசாரையாக பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தமிழகம் என பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் அண்மையில் டெல்லிக்கு வந்தடைந்தனர்.
ஐந்து எல்லைகள்
டெல்லியில் பல்லாயிரம் பேர் டிராக்டர்களுடன் குவிந்திருந்த நிலையில், போலீசார் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தனர். இதன்படி டெல்லியின் வெளிவட்ட சாலைகளான சிங்கு, திக்ரி, காஜிபூர், பல்வால், ஷாஜகான்பூர் ஆகிய 5 எல்லைகளில் இருந்து டிராக்டர்கள் பேரணி நடத்த விவசாயிகளுக்கு டெல்லி போலீசார் அனுமதி கொடுத்தனர். 100 கிமீ தூரத்திற்கு ஐந்து வழிகளிலும் நடத்தலாம் என்று விவசாயிகளுக்கு போலீசார் அனுமதி கொடுத்திருந்தனர்.
முன்னதாக ஆரம்பம்
அதே நேரம் குடியரசு தின விழா நடைபெறும் செங்கோட்டை பகுதியில் எந்த சீர்குலைவு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று நிபந்தனையும் விதித்தனர். இதை விவசாயிகளும் ஏற்றுக்கொண்டு பேரணியை இன்று காலை ஆரம்பித்தனர். பேரணி துவங்க வேண்டிய நேரத்திற்கு முன்பாக ஆரம்பம் ஆனதால் பரபரப்பு நிலவியது.
ஏன் வன்முறை
ஹரியானாவில் இருந்து டெல்லிக்குள் நுழையும் எல்லையான சிங்குவில் வன்முறை வெடித்தது. அனுமதிக்கப்பட்ட பாதையில் இருந்து மாற்றுப்பாதையில் செல்லுமாறு போலீசார் கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில விவசாயிகள் தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்றனர். அப்போது ஆரம்பித்தது முதல் மோதல். கண்ணீர் புகை குண்டு, தடியடி என சிறிது நேரத்திலேயே அந்த இடமே போர்களமாக மாறியது.
விவசாயிகள் மீது தடியடி
இதற்கிடையே பரிதாபாத் எல்லை பகுதியில் விவசாயிகள் மீது காவல்துறையினர் கடும் தாக்குதல் நடத்தினர். ஆவேசத்துடன் டெல்லிக்குள் நுழைய முயன்றவர்களை தடுத்து நிறுத்திய போது வன்முறை வெடித்தது. இதேபோல் அடுத்தடுத்து வன்முறைகள் வெடித்ததால் கொஞ்சம் கொஞ்சமாக டெல்லியில் நிலைமை கைமீறிப்போனது. நிலைமை இப்போது உண்மையில் கைமீறிப்போயுள்ளது.
பல போலீசார் காயம்
டெல்லி வன்முறையில் விவசாயிகள் மட்டுமல்ல் போலீசார் பலரும் காயம் அடைந்துள்ளனர். விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையினர் மீதும் பல இடங்களில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. பெண் காவல்துறை அதிகாரிகள் உட்பட பலரும் இந்த தாக்குதலில் காயமடைந்து உள்ளனர்
விவசாயிகள் செங்கோட்டையில்
போராட்டத்தில் திடீர் திருப்பமாக குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்ற செங்கோட்டை பகுதிக்கு விவசாயிகள் வாகனத்தை திருப்பினர். 100க்கனக்கான விவசாயிகள் டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டையை நோக்கி முன்னேறினர். ஒரு கட்டத்தில் செங்கோட்டையை அடைந்துள்ளனர். அங்கு விவசாயிகளின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. குடியசு தின அணிவகுப்பில் பங்கேற்ற அனைத்து வாகனங்களும் செங்கோட்டை பகுதியில் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதிகளில் விவசாயிகள் குவீந்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
போலீஸ் அலுவலகம் முற்றுகை
இது ஒருபுறம் எனில் டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தையும் விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். ஐடிஓ பகுதியில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகம் கட்டிடத்தை சுற்றிலும் டிராக்டர்களுடன் குவிந்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே விவசாயிகள் யாரும் சட்டத்தை கையிலெடுக்க வேண்டாம் டெல்லி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. டெல்லியில் தற்போது நிலைமை கைமீறிப் போய் வரக் கூடிய நிலையில் டெல்லி காவல் துறை சார்பில் விவசாயிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.