ஈரானின் சபாஹர் திட்டத்தில் இருந்து விலக்கப்பட்டது இந்தியாவுக்கு மிகப் பெரும் இழப்பு: காங். சாடல்
டெல்லி: ஈரானின் சபாஹர் துறைமுக ரயில் திட்டத்தில் இருந்து இந்தியா விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவுக்கு மிகப் பெரும் இழப்பு என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகம் அருகே அமைந்திருக்கிறது ஈரானின் சபாஹர் துறைமுகம். பாகிஸ்தானுடன் இணைந்து கவ்தார் துறைமுகத்தை மேம்படுத்தி தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது சீனா.
முதல் முறையாக ஈரான் செல்கிறார் மோடி- சபாஹர் துறைமுகம் குறித்து முக்கிய ஆலோசனை!
சபஹாரில் இந்தியா
இதற்கு சமன் போட்டியாகவே ஈரானின் சபஹார் துறைமுகத்தில் இந்தியா கை வைத்தது. ஆப்கானிஸ்தானில் இந்தியா ஏற்கனவே பல்வேறு கட்டமைப்பு பணிகளை செய்து வருகின்றன.இந்த நிலையில் சபாஹர் துறைமுகத்தை மேம்படுத்துவதன் மூலம் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டு வரும் பணிகள் எளிமையானதாகும் என்பது இந்தியாவின் கணக்கு.
சீனாவின் கவ்தார் கனவு
மற்றொன்று கவ்தார் துறைமுகத்தில் கால் பதித்த சீனாவுக்கு அங்கேயே அதிரடியாக செக் வைப்பது என்பது இந்தியாவின் கணக்கு. கவ்தாரில் கால்பதித்த சீனா, எண்ணெய் கப்பல்களை எளிதாக சீனாவுக்கு கொண்டு செல்வதையும் தரைவழியாக சீனாவுக்கு எண்ணெய் கொண்டு செல்வதையும் இலக்காக கொண்டிருந்தது.
இந்தியாவின் ஆப்கான் ரயில் திட்டம்
இந்த சபாஹர் துறைமுக திட்டத்தின் ஒரு அங்கம்தான் ஆப்கானிஸ்தான் பகுதிகள் வரையிலான ரயில் திட்டம். ஆனால் இந்த ரயில் திட்டத்தை இந்தியா தொடங்காமல் கிடப்பில் வைத்திருந்தது. அமெரிக்காவுடனான இந்தியாவின் நெருக்கத்தினால் ஒருவித தயக்கத்தில் இந்த ரயில் பணிகளை இந்தியா மேற்கொள்ளாமல் இருந்தது.
இந்தியாவுக்கு எதிராக ஈரான்
இந்தியாவின் அமெரிக்கா சார்பு நிலையை உணர்ந்து கொண்ட ஈரான், இன்னொரு பக்கம் சீனாவை தம் வசமாக்கிக் கொண்டது. ஈரானின் ரயில் திட்டங்கள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சீனாவுடன் ஒப்பந்தமும் போட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் சபாஹர் துறைமுக திட்டத்தில் இருந்து இந்தியாவை விலக்குவதாக ஈரான் கூறி இருக்கிறது.
காங். கருத்து
இந்திய வெளியுறவுக் கொள்கையில் மிகப் பெரிய பின்னடைவு இது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து. இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, இந்தியாவுக்கு மிகப் பெரிய இழப்பு. அதேநேரத்தில் சீனா ஆதாயம் அடைந்துள்ளது. இருந்தபோதும் மத்திய அரசை நீங்கள் கேள்வி கேட்க முடியாது எனவும் கூறியுள்ளார்.