பெரிய பெரிய ஸ்கீரீன்கள், துண்டு பிரசுரங்கள்.... மோடியின் உரைக்கு பாஜக போட்டுள்ள மாஸ்டர் பிளான்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாளை ஒன்பது கோடி விவசாயிகளுடன் கலந்துரையாடவுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியைப் பிரபலப்படுத்த பாஜக பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது.
மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் மூன்று புதிய வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இரு அவைகளிலும் பாஜகவிற்குப் பெரும்பான்மை இருப்பதால் இந்தச் சட்டங்களை மிக எளிதாக பாஜக நிறைவேற்றியது.
ஆனால் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவும் காப்ரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இந்த வேளாண் சட்டங்கள் இருப்பதாகக் கூறி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அசத்தும் சென்னை ஆட்டோ டிரைவர்கள்.. விவசாயிகள் போராட்டத்திற்கு எப்படி ஆதரவு கொடுக்கிறார்கள் பாருங்க!
முற்றுகையிடப்பட்டுள்ள தலைநகர்
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து 29ஆவது நாளாகத் தலைநகரை டெல்லியை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிர் காரணமாக இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 30 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
700 மாபெரும் கூட்டங்கள்...
விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போதும் வேளாண் சட்டங்களை திரும்பபெறக் கூடாது என்பதில் பாஜக திட்டவட்டமாக உள்ளது. மேலும், வேளாண் சட்டங்கள் குறித்த தவறான புரிதலே இந்தப் போராட்டங்களுக்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளது. எனவே இந்தப் புதிய சட்டங்கள் குறித்து விவசாயிகளிடமும் பொதுமக்களிடமும் விளக்கும் வகையில் நாடு முழுவதும் சுமார் 700 மாபெரும் விளக்கக் கூட்டங்களை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும், வேளாண் சட்டங்கள் குறித்து விளக்க 100 செய்தியாளர் சந்திப்புகளையும் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
ஒன்பது கோடி விவசாயிகளுடன் உரையாடும் மோடி
பாஜகவின் இந்த மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியாகப் பிரதமர் மோடி நாளை ஆறு மாநிலங்களைச் சேர்ந்த ஒன்பது கோடி விவசாயிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டைப் பிரதமர் தெளிவுபடுத்துவார். மேலும் பிரதமரின் கிஷான் திட்டித்தின் கீழ் அடுத்தகட்டமாக சுமார் 18,000 கோடி ரூபாய் நிதியுதவி திட்டங்களையும் அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவின் மாஸ்டர் பிளான்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அனைத்து மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். மேலும், இது குறித்து பாஜகவின் அனைத்து மாநில தலைவர்களுக்கும் மூத்த தலைவர்களுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாளை டெல்லியில் உள்ள பசு காப்பகத்தில் விவசாயிகளுடன் உரையாடுகிறார்.
பெரிய ஸ்க்ரீன்... துண்டு பிரசுரங்கள்...
மேலும் ஜே பி நட்டா தனது உத்தரவில், "பிரதமரின் உரையைப் பொதுமக்கள் கேட்க வசதியாக ஒவ்வொரு தொகுதி மேம்பாட்டு மையத்திலும் பெரிய திரைகளை ஏற்பாடு செய்ய வேண்டும், பிரதமரின் பேச்சுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னால் மாவட்ட அளவிலான நிகழ்ச்சிகளையும் நடத்தலாம் . மேலும், அனைத்து மண்டிகளிலும், சந்தைகளிலும் இந்த ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்" என்று அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், நாடு முழுவதும் இருக்கும் பாஜக தலைவர்களும் வேளாண் மசோதாக்கள் குறித்து மக்களுக்கு விளக்கவுள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிராந்திய மொழிகளில் துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டும் விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ராகுல் தாக்கு
முன்னதாக இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "இந்தியாவில் ஜனநாயகம் என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டது. பிரதமர் மோடி தனது நண்பர்களான முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கிறார். அவர்களுக்கு எதிராக நிற்கும் அனைவரையும் பயங்கரவாதிகள் என்று அழைக்கிறார். அது விவசாயிகளாக இருந்தாலும் சரி, தொழிலாளர்களாக இருந்தாலும் சரி" என்றார்.
மான் கி பாத் உரையைப் புறக்கணியுங்கள்
டெல்லி-ஹரியானா எல்லையில் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய வேளாண் சங்க தலைவர்கள், "சரியான திருத்தங்களை மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக முன்வைக்க வேண்டும். மேலும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பொதுமக்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமரின் மான் கி பாத் உரையைப் புறக்கணிக்க வேண்டும்" என்றும் அழைப்பு விடுத்தனர்.