பீகார் சட்டசபை தேர்தல்: ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்.. ஓட்டு போடுவோருக்கு கையுறை.. அசத்தல் ஏற்பாடுகள்
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கொரோனா காலம் என்பதால் தேர்தலை பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிமுறைகளையும் தெரிவித்தார்.
பீகாரில் அக்டோபர் 28ல் முதல் கட்ட வாக்குப் பதிவு துவங்குகிறது. நவம்பர் 10-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
அக் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக நடைபெறுகிறது.
கொரோனா பிரச்சினை இப்போதைக்கு முடிவடையாது போல தெரிவதால், ஜனநாயக கடமையாற்றும் வாய்ப்பை தள்ளிப்போட முடியாது என்று தனது பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
பீகார் தேர்தலுக்கான இந்த ஏற்பாடுகள் இனி பல மாநிலங்களிலும் தேர்தலின்போது எந்த மாதிரியான ஏற்பாடுகள் கொண்டுவரப்படும் என்பதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
பீகார் சட்டசபை தேர்தலில் 16.6 லட்சம்... இடம் பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்கலாம்!!
கூடுதலாக 1 மணி நேரம்
இதோ அதுகுறித்த விவரம்: பீகாரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும். பீகாரில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7.29 கோடி. பீகார் சட்டசபை தேர்தலுக்கு 1,89.900 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். கூட்டம் கூடுவதை குறைக்க மாலை 6 மணி வரை, அதாவது 1 மணி நேரம் கூடுதலாக வாக்குப்பதிவு செய்ய நேரம் ஒதுக்கப்படும். அதிகபட்சமாக 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்படும்.
மருத்துவ உபகரணங்கள்
7 லட்சத்துக்கும் மேற்பட்ட கை சானிட்டைசர்கள், சுமார் 46 லட்சம் முகத் திரைகள், 6 லட்சம் பிபிஇ உபகரணங்கள், 6.7 லட்சம் யூனிட் முக கவசங்கள், 23 லட்சம் (ஜோடி) கையுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வாக்காளர்கள் அனைவரும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் வகையில் கையுறைகள் வாங்கி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பெட்டியில் பொத்தானை அழுத்தும்போது கிருமி பரவாமல் இருக்க இந்த கையுறைகள் பயன்படும்.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள்
தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் வாக்கெடுப்பின் கடைசி நாளில், அந்தந்த வாக்குச் சாவடிகளில், சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் வாக்களிக்க முடியும். ஏற்கனவே அவர்களுக்கு போஸ்டல் ஓட்டு வாய்ப்பும் தரப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தாவிட்டால் இந்த வாய்ப்பு உண்டு.
ஆன்லைனில் வேட்புமனுத் தாக்கல்
ஆன்லைனில் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம், ஆன்லைன் மூலம் டெபாசிட் பணம் செலுத்தலாம். வேட்புமனுத் தாக்கலுக்கு நேரில் வரும்போது 2 வாகனங்கள், 2 பேருக்கு மட்டுமே அனுமதி தரப்படும். 16 லட்சம் இடம்பெயர் தொழிலாளர்கள் பீகார் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களாகும். பீகாரில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
வீடு வீடாக பிரச்சாரம்
பீகார் சட்டசபை தேர்தலில் வீடு வீடாக 5 பேர் வரை பிரசாரம் செய்யலாம். அதற்கு மேல் நபர்கள் போகக்கூடாது. இவ்வாறு சுனில் அரோரா தெரிவித்தார். மொத்தத்தில், பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்த அசத்தல் ஏற்பாடுகளை செய்துள்ளது தேர்தல் ஆணையம்.