சர்ச்சையே உன்பெயர்தானா பாண்டே?விஆர்எஸ் கேட்ட உடனே கிடைச்சிருச்சு-பீகார் மாஜி டிஜிபியின் அரசியல் லீலை
டெல்லி: பீகார் முன்னாள் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டேவுக்கு விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) கேட்ட உடனேயே கொடுக்கப்பட்டிருப்பதுதான் சர்ச்சையாகி உள்ளது. வி.ஆர்.எஸ். கேட்ட பலரும் பல மாதங்களாக 'தேவுடு' காத்திருக்கும் நிலையில் பாண்டேவுக்காக சட்டம் வளைக்கப்பட்டதுதான் சர்ச்சை.
பீகார் டிஜிபி குப்தேஸ்வர்... சர்ச்சைகளுக்கு பெயர் போன ஜெகஜால கில்லாடி. 2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நேரம்.. திடீரென விருப்ப ஓய்வு வாங்கிவிட்டு பணியை ராஜினாமாவே செய்துவிட்டார்.
இதற்கு காரணம், 2009 லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட விரும்பியதுதான்.. ஆனால் இலவு காத்த கிளி கதைதான் குப்தேஸ்வருக்கு.. தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கவில்லை. ஆனால் என்ன அவருக்கு அப்படி ஒரு செல்வாக்கு இருந்தது.
ராஜினாமா- மீண்டும் பதவி
இதனால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போன 9 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஐபிஎஸ் அதிகாரியாக இணைந்து கொண்டார். ஆனாலும் அரசியல் ஆசை அவரை விட்டுப் போய்விடவில்லை. அண்மையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசுக்கும் பீகார் அரசுக்கும் பெரும் மோதலே வெடித்தது.
பீகார் vs மகா. மோதல்
இந்த மோதலுக்கு அச்சாரமாக இருந்ததவரும் இந்த பாண்டேதான். பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை யார் விமர்சித்தாலும் உடனே அவரது கொள்கை பரப்பு செயலாளர் ரேஞ்சுக்கு பதில் கொடுத்து வந்தார். சுஷாந்த் சிங் மரண வழக்கு சிபிஐக்கு போய் இவ்வளவு பெரிய சிக்கலானதற்கு காரணம் என்று கூட இந்த குப்தேஸ்வர் பாண்டேவைச் சொல்லலாம்.
வி.ஆர்.எஸ். வாங்கிய பாண்டே
இப்படி சர்ச்சையே உன்பெயர்தானா பாண்டே? என்கிற அளவுக்கு விஸ்வரூபம் எடுத்த குப்தேஸ்வர் பாண்டே ஆடிய அடுத்த ஆட்டம்தான் அடேங்கப்பா ரகம்.. பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார் இப்போது.. இதோ வரப்போகிற சட்டசபை தேர்தலில் பாஜக அல்லது ஜேடியூ கட்சியின் வேட்பாளராக களம் இறங்கப் போகிறார்.. இதற்கான அத்தனை முஸ்தீபுகளில் இறங்கிவிட்டார் குப்தேஸ்வர் பாண்டே.
வி.ஆர்.எஸ். கேட்ட உடனே கிடைச்சது
சரி..நேற்று வரை பணியில் இருந்த குப்தேஸ்வர் பாண்டே. எப்படி திடீரென வி.ஆர்.எஸ். வாங்கினார்.. குப்தேஸ்வர் பாண்டே வி.எஸ்.ஆர். கேட்ட 24 மணிநேரத்துக்குள் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டு 3 நாட்களிலேயே அவர் விடுவிக்கப்பட்டும் விட்டார். இதே போலீஸ் பணியில் வி.ஆர்.எஸ்.-க்கு விண்ணப்பித்து பல மாதங்களாக தவமாய் தவமிருந்து காத்து கிடப்பவர்கள் பட்டியல் நீளமானது. ஆனாலும் குப்தேஸ்வர் பாண்டேவுக்காக சட்டம் சட்டென வளைந்து கொடுத்திருக்கிறது. இதுதான் கடும் அதிருப்தியையும் சர்ச்சையையும் உருவாக்கி இருக்கிறது.
ஏழையின் மகன் நான்..
ஆனால் சட்டம் தனக்காக வளைக்கப்பட்டது பற்றி எல்லாம் பேசாத குப்தேஸ்வர் பாண்டே, நான் ஒரு ஏழைத்தாயின் மகன்.. இந்த மண்னுக்காக.. மக்களுக்காக பாடுபட வருகிறேன்.. ஒரு ஏழைத்தாயின் மகன் அரசியலுக்கு வருவது பொறுக்கவில்லையா உங்களுக்கு? என்று யாருடைய ஸ்கிரிப்ட்டையோ ஒப்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் உச்சகட்ட காமெடி.