பீகார் தேர்தல்...காங்கிரஸ் பிரச்சாகர்கள் பட்டியல்...மூத்த தலைவர்களுக்கு முக்கியத்துவம்!!
டெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் சத்ருகன் சின்ஹா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி ஆகியோர் முதல் கட்ட பிரச்சாரம் செய்கின்றனர்.
பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. பீகாரில் மொத்தம் இருக்கும் 243 சட்டசபை தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. ராஷ்டிரிய ஜனதா தளம் 144 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிடுகின்றன. இதில் மற்ற தோழமை கட்சிகளுக்கு காங்கிரசும், ராஷ்டிய ஜனதா தளமும் தொகுதிகளை பிரித்துக் கொடுத்து இருக்கின்றன.
அதன்படி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மொத்தமாக காங்கிரஸ் 29 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் ஒதுக்கியது போக வெறும் 81 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலின் பேரில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் நட்சத்திர அரசியல் தலைவர்களின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சத்ருகன் சின்ஹா, பிரியங்கா காந்தி, குலாம் நபி ஆசாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
ஓஹோ.. தனிச்சின்னத்தில் மதிமுக போட்டியிட விரும்ப இதுதான் காரணமா.. வைகோ செம டிரிக்!
மேலும் 30 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகேல், கீர்த்தி ஆசாத், தாரிக் ஆனவர், சஞ்சய் நிருபம், ராஜ் பாபர் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் தேர்தல் யுக்திகள் குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் முடிவு செய்வதற்கு நேற்று இரவு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பாஜக கூட்டம் நடந்தது.
தேர்தல் மூன்று கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.