மெதுவான, நிலையான வளர்ச்சிப் பாதையில் பீகார்.. நிதிஷ்குமாரின் 15 ஆண்டுகால ஆட்சியின் நிஜமுகம்!
டெல்லி: பீகாரில் 15 ஆண்டுகாலமாக முதல்வராக இருந்து வரும் முதல்வர் நிதிஷ்குமார் ஆட்சிக் காலத்தில் அந்த மாநிலம் மெதுவான அதேநேரத்தில் நிலையான வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
பீகாரில் கடந்த ஐந்தாண்டுகளில் வேளாண் துறை, சுகாதாரத்துறை, கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முன்னேற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. நிதிஷ்குமார் 2005-06 ஆம் ஆண்டு முதல்வராக இருந்தது முதல் 2014-15 வரை பீகார் மாநிலத்தின் ஜிஎஸ்டிபி- gross state domestic product ஆண்டுக்கு 10.5% வளர்ச்சியை வெளிப்படுத்தியது. 2010-11; 2014-15 ஆண்டுகளில் தேசிய அளவிலான வளர்ச்சியை ஒப்பிடுகையில் அதிகமாகவே இருந்தது.
பீகார்: காங். மேலும் 49 வேட்பாளர்களை அறிவித்தது- சத்ருகன் சின்ஹா மகன், சரத்யாதவ் மகள் போட்டி!
வளர்ச்சியில் அரசியல் தாக்கம்
2015 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான உறவை நிதிஷ்குமார் முறித்துக் கொண்டார். ஆர்ஜேடியுடன் கூட்டணி வைத்தார். பின்னர் 2017-ல் ஆர்ஜேடியுடனான உறவு முறிந்தது. இந்த அரசியல் ஊசலாட்டங்கள் மாநிலத்தில் வளர்ச்சியிலும் தாக்கத்தை வெளிப்படுத்தியது. ஆம் 2015-16-ல் மாநிலத்தின் ஜிஎஸ்டிபி- 7.6% ஆக சரிந்தது. கடந்த கால நிதிஷ் ஆட்சிகளை ஒப்பிடுகையில் மிக மிக குறைவான வளர்ச்சி.
நிதிஷ் ஆட்சியில் புதிய பாய்ச்சல்
பின்னர் புதிய பாய்ச்சலை நோக்கி ஜிஎஸ்டிபி பாய்ந்தது என்றே சொல்லலாம். 2018-19-ல் பீகாரின் ஜிஎஸ்டிபியானது 10.5% ஆக உள்ளது. தேசிய அளவில் 6.1%தான் இருக்கிறது. நீங்கள் தனிநபர் வருமானத்தை கணக்கிட்டுக் கொண்டாலும் பீகார் முன்னேற்றத்தை எட்டியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். 2015-16-ல் தனிநபர் வருமானம் 29.190 ஆக இருந்தது. 2018-19ல் இது 33,629 ஆக அதிகரித்திருக்கிறது. இதேபோல் பீகாரில் கல்வி, பொதுசுகாதாரம், சமூக சேவைகள் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை ஒப்பிட்டுப் பாருங்கள்.
பிரதான துறைகளுக்கான ஒதுக்கீடு
2015-16ல் கல்விக்கு ரூ19,385.6 கோடி ஒதுக்கீடு; ஆனால் 2019-20ல் ரூ35,942 கோடி; பொது சுகாதாரத்துறைக்கு 2015-16ல் ரூ4,571 கோடி, கடந்த ஆண்டு இது 9,157 ஆக உயர்ந்திருக்கிறது. இதேபோல் 2015-16ல் சமூக சேவைகள் துறைக்கு ரூ38,684 கோடி; 2018-19ல் இது ரூ58,284 கோடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தொழில் துறையில் முன்னேற்றம் காண்பதற்கு பீகார் பெரும் போராட்டத்தைத்தான் சந்திகக் வேண்டியதும் இருக்கிறது. 2015-16ல் தொழில்துறை வளர்ச்சி 7.1% இருந்தது. இது மாநிலத்தின் ஜிஎஸ்டிபியில் 19% பங்களிப்பு கொடுத்தது.
தொழில்துறையில் தள்ளாட்டம்
2017-18-லும் மாநிலத்தின் ஜிஎஸ்டிபியில் தொழில்துறையின் பங்களிப்பு 20% ஆகவே இருக்கிறது. மேலும் 2016-17-ல் 3,531 தொழிற்சாலைகள் தொடங்க திட்டமிடப்பட்ட நிலையில் 2900மட்டும்தான் இயக்கவும் முடிந்தது. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் சராசரியாக 40 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இருப்பினும் வேளாண்துறைக்கு நிதிஷ்குமாரின் ஜேடியூ அரசு மிகவும் முன்னுரிமை அளித்து வருகிறது. ஏனெனில் பீகாரின் 70% உழைப்புசக்தி என்பதி வேளாண் தொழில்சார்ந்தே இருக்கிறது. 2017-18ல் மாநிலத்தில் ஜிஎஸ்டிபியில் 20% ஆக வேளாண்துறை இருந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் இது 18% ஆக மட்டுமே இருந்தது.