பீகாரில் இடி இடிக்க டெல்லியில் ஷாக் அடிக்குதே-நிதிஷ்குமார் முடிவால் ராஜ்யசபாவில் பாஜகவுக்கு செட்பேக்
டெல்லி: பீகாரில் பாரதிய ஜனதா தலைமையிலான (பாஜக) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) விலகி உள்ளது. இதனால் நாடாளுமன்ற ராஜ்யசபாவில் பாஜகவுக்கு புதிய நெருக்கடி உருவாகி உள்ளது.
பீகாரில் 2 ஆண்டுகளாக பாஜக-ஜேடியூ கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஜேடியூவை பாஜக அழிக்க பார்க்கிறது என்கிற குற்றச்சாட்டை முன்வைத்து அக்கட்சியுடனான உறவை முதல்வர் நிதிஷ்குமார் முறித்துக் கொண்டார்.
இதனையடுத்து லாலுவின் ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவுடன் புதிய கூட்டணி ஆட்சியை அமைக்கிறார் நிதிஷ்குமார். பீகார் முதல்வராக 8-வது முறையாக இன்று பாட்னாவில் நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளார். பல்வேறு மாநிலங்களில் பல கட்சிகளை பதம் பார்த்த பாஜகவுக்கு பீகாரில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கொண்டாடி வருகின்றன. பாஜக தலைவர்களும், நிதிஷ்குமார் செய்தது பச்சை துரோகம்; ஆர்ஜேடியை ஊழல் கட்சி என கூறி முதல்வர் பதவியை தூக்கி எறிந்தவர்தான் நிதிஷ்குமார். இப்போது அதே நிதிஷ்குமார் அதே ஆர்ஜேடியுடன் கூட்டணி ஆட்சி அமைப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் என குமுறுகின்றனர்.
பீகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் தலைகீழ் மாற்றங்கள் டெல்லி அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற ராஜ்யசபாவில் ஏற்கனவே பெரும்பான்மைக்கு போராடும் பாஜகவுக்கு ஜேடியூவின் இந்த முடிவு புதிய நெருக்கடியை உருவாக்கி உள்ளது. ராஜ்யசபாவில் தற்போதைய எம்.பி.க்கள் எண்ணிக்கை 237. ராஜ்யசபாவில் மொத்தம் 8 இடங்கள் காலியாக உள்ளன. இதில் ஜம்மு காஷ்மீரின் 4 எம்.பிக்கள்; திரிபுராவின் 1; நியமன எம்.பிக்கள் 3 இடங்கள் ஆகும். தற்போதைய நிலையில் பெரும்பான்மைக்கு தேவை 119 எம்.பிக்கள் ஆதரவு. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தம் 115 எம்.பிக்கள் இருந்தனர். இதில் 5 நியமன எம்.பிக்கள், ஒரு சுயேட்சை எம்.பியும் அடங்குவர்.
தற்போது பாஜக கூட்டணியில் இருந்து 5 ராஜ்யசபா எம்.பிக்களைக் கொண்ட நிதிஷ்குமாரின் ஜேடியூ வெளியேறிவிட்டது. இதனால் ராஜ்யசபாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 110 ஆக குறைந்துவிட்டது. தற்போதைய நிலையில் பாஜக கூட்டணியில் பெரும்பான்மைக்கு தேவை 9 எம்.பிக்கள். குளிர்கால கூட்டத் தொடரில் 3 நியமன எம்.பிக்களை மத்திய அரசு நியமிக்க வாய்ப்புள்ளது; திரிபுராவில் தேர்தல் நடைபெற்றால் பாஜக வெல்லவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தாலும் பெரும்பான்மைக்கு 5 எம்.பி.க்கள் தேவை என்கிற நிலையில் இருக்கும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி.
Recommended Video
இதனால் வேறுவழியே இல்லாமல் ஒடிஷாவின் பிஜூ ஜனதா தளம்; ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பிக்களின் ஆதரவை பெற்றாக வேண்டிய கட்டாயம் பாஜக அணிக்கு உருவாகி உள்ளது. இந்த கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே, மத்திய அரசால் முக்கிய மசோதாக்களை ராஜ்யசபாவில் நிறைவேற்ற முடியும். ஆகையால் பீகாரில் நிதிஷ்குமார் குட்பை சொன்னதன் மூலம் ராஜ்யசபாவில் புதிய நெருக்கடியை பாஜக எதிர்கொண்டிருக்கிறது.