என் மகன் செத்துட்டானே.. முகத்தைகூட பார்க்க முடியாம போச்சே.. இதான் எங்க கதியா? இதயத்தை கிழித்த போட்டோ
புலம்பெயர் தொழிலாளியின் புகைப்படம் மனதை கரைய வைத்து வருகிறது
டெல்லி: "என் மகன் செத்துட்டானே... ஒரே ஒருமுறை அவனை நான் பார்த்துடணும்னு நினைச்சேனே.. இப்படி கடைசியா அவன் முகத்தைகூட பார்க்க முடியாம போச்சே.. எங்க நிலைமை எல்லாம் இப்படிதானா? எங்க கதியை பாருங்க" என்று மகன் இறந்த செய்தியை கேட்டு கதறும் புலம் பெயர் தொழிலாளியின் கண்ணீர் வார்த்தைகள் மக்கள் நெஞ்சை கசக்கி பிழிந்து வருகின்றன.
Recommended Video
சில நாட்களாகவே ஒரு போட்டோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.. முகமெல்லாம் பதட்டம்... அப்பிய சோகம்.. வழிந்தபடியே இருக்கும் கண்ணீர், கட்டுப்படுத்த முடியாத கதறல்.. யாராலும் ஆறுதல் சொல்ல முடியாத துக்கத்துடன் ஒருவர் கதறி செல்போனில் அழும் போட்டோதான் அது.
இவர் ஒரு புலம்பெயர் தொழிலாளி.. பெயர் ராம்புகார்.. பீகார் மாநிலத்தில் உள்ள பரியார்புர் என்ற கிராமம்தான் இவரது சொந்த ஊர்.. கல்யாணமாகி 3 மகள்கள், ஒரே ஒரு மகன்.. கடந்த ஆண்டுதான் இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது... சின்ன வயசிலேயே இவர் புலம்பெயர்ந்து டெல்லியில் கட்டிட தொழிலாளியாக சென்று விட்டாராம்.
தியேட்டர்
டெல்லியில் ஒரு தியேட்டர் கட்டி வருகிறார்கள்.. அங்குதான் இவர் வேலை செய்ய போயுள்ளார்.. அந்த சமயத்தில் லாக்டவுன் போடவும், லட்சக்கணக்கான தொழிலாளர்களுடன் இவரும் அங்கிருந்து கிளம்பி சொந்த ஊருக்கு நடக்க ஆரம்பித்துள்ளார். அப்போதுதான் மகனுக்கு உடம்பு சரியில்லை என்று போன் வந்துள்ளது.. அதனால் மகனை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று தெம்பை வரவழைத்து கொண்டு உயிரை கையில் பிடித்து கொண்டு நடந்தார்.
3 நாள் சோகம்
ஆனால், நிஜாமுதீன் பாலம் அருகே வந்தபோது போலீஸார் இவர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர்.. அதனால் 3 நாட்களாக அங்கேயே இருந்துவிட நேர்ந்துள்ளது. அந்த நிஜாமுதீன் பாலத்தில் 3 நாளுமே கடுமையான அவஸ்தைக்கு ஆளாகி உள்ளார்.. கையில் காசு இல்லை.. பசி வேறு! ஒவ்வொரு நிமிடமும் நோயாளி மகனை சந்திக்க முடியுமோ, முடியாமல் போய்விடுமோ என்று துடிதுடித்தபடியே இருந்திருக்கிறார்.
இறந்துவிட்டார்
அப்போது வந்த அந்த போனில் மகன் இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது.. இறந்த செய்தியை கேட்டு சுக்குநூறாக நொறுங்கிவிட்டார் ராம்புகார்.. தேற்ற ஆளில்லை.. ஊருக்கு செல்ல வழியும் இல்லை.. கண்ணீர் விட்டு அழுவதை தவிர வேறு வழியே இல்லை. "பெத்த பிள்ளையை சாகிற நேரத்துல கூட பார்க்க வழியில்லாம போச்சே" என்று செல்போனில் சொந்த பந்தத்திடம் சொல்லி அழும்போது, பிடிஐ போட்டோகிராபர் அதுல் யாதவ் என்பவர் இந்த காட்சியை படம் பிடித்துவிட்டார். அதை சோஷியல் மீடியாவில் பரவும் அனைவரின் இதயத்தையும் நொறுக்கிவிட்டது.
கதறி அழுதார்
இந்நிலையில், அந்த தொழிலாளிக்கு சொந்த ஊர் செல்ல உதவிகள் கிடைத்துள்ளதாம்.. இதை பற்றி அதுல் யாதவ் சொல்லும்போது, "புலம் பெயர் தொழிலாளிகளின் அவல நிலையை விளக்கும் வகையில் நான் போட்டோக்களை எடுத்து கொண்டிருந்தேன்.. அப்போது போன வாரம் டெல்லி ரோட்டில்தான் அவரை சந்தித்தேன்.. செல்போனில் கதறி அழுது கொண்டிருந்தார்.. அவரது கண்ணீர், கஷ்டத்தை பார்த்ததும் என்னால் அங்கிருந்து நகர்ந்து செல்லவே முடியவில்லை. அவருக்கு 40 வயசு இருக்கும்.. பிறகு அவரிடம் சென்று "நீங்க எங்கே போக வேண்டும்" என்று கேட்டேன்.. அந்த நபரால் பேச முடியவில்லை.. நா தழுதழுக்க கையை நீட்டி "அங்கே" என்றார்.
உதவி செய்ய விடல
பிறகு, "என் மகன் சாக கிடக்கிறான்.. அவனை கடைசியா ஒருமுறை பார்த்துடணும்னு நினைச்சேன்.. ஆனா பார்க்க முடியாம போய்டுமோன்னு தெரியலையே என்று வெடித்து கதறி அழுதார்.. என்னிடம் கொஞ்சம் பிஸ்கட் இருந்தது.. அதை எடுத்து அவருக்கு தந்தேன்.. குடிக்க தண்ணீர் கொடுத்தேன்.. அவரை ஆசுவாசப்படுத்தினேன்... அவருக்கு உதவ வேண்டும் என்று முன்வந்தேன்.. ஆனால் போலீசார் அதற்கு அனுமதி தரவில்லை. அவர் சொந்த ஊருக்கு போவதற்காக தாங்களே உதவுகிறோம் என்று போலீசார் சொல்லிவிடவும் நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
போட்டோ
அப்போதுதான் எனக்கு ஒன்று ஞாபகம் வந்தது.. அந்த நபர் யார்? அவர் வீட்டு முகவரி, செல்போன் நம்பர் இது எதையுமே நான் வாங்காமல் வந்துவிட்டேன்.. அவர் சொந்த ஊருக்கு போய் சேர்ந்தாரா? தன் மகனை சந்தித்தாரா? என்றுகூட தெரியாமல் தவித்தேன்.. அளவுக்கு அதிகமாக மனம் புழுங்கினேன்.. அதற்கு பிறகுதான், நான் எடுத்த அந்த போட்டோவை எல்லா டிவி மீடியாக்கள், சோஷியல் மீடியாக்களிலும் பதிவிட்டேன்.. அந்த போட்டோவும் வைரலாகியது.
நொறுங்கிவிட்டது
ஊடகங்கள் விரைந்து அந்த போட்டோவை பதிவிட்டது. இப்போது அந்த நபர் யார் என்று தெரிந்துவிட்டது.. அவர் பெயர் ராம்புகார் பண்டிட், அவர் "அங்கே" என்று கைகாட்டினாரே, அது 1200 கிலோ மீட்டர் தூரமிருந்த பீகார் மாநிலத்தில் உள்ள பரியார்புர் என்ற கிராமத்தைதான். ஆனால், சொந்த ஊர் செல்லும் முன்பே அவரது மகன் இறந்துவிட்டாராம்.. இதை கேட்டதுமே என் இதயம் உடைந்தது" என்றார் போட்டோகிராபர் அதுல் யாதவ்.
வறுமை சக்கரம்
இந்நிலையில், பாதிக்கப்பட்ட ராம்புகார் பண்டிட் பிடிஐ செய்து நிறுவனத்துக்கு ஒரு பேட்டியை போன்மூலம் தந்துள்ளார்.. அதில் அவர் துக்கத்துடன் சொல்லும்போது, "நாங்கெல்லாம் தொழிலாளர்கள்.. தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கு வாழ்க்கை இல்லை... வாழ்க்கை முழுக்க வறுமை சக்கரத்தில் சிக்கியே சாகணும்.. என் பையனுக்கு ஒரு வயசுகூட இன்னும் முடியல.. அவன் இறந்த செய்தியை செல்போனில் கேட்டதும் நான் துடிச்சு போயிட்டேன்.. உதவ எனக்கு யாருமே இல்லை.. சொந்த ஊருக்கு என்னை அனுப்பி வெச்சிடுங்கன்னு போலீஸார்கிட்ட எவ்வளவோ கெஞ்சினேன்.. ஆனா உதவி கிடைக்கல.
பத்திரிகையாளர்
"இப்போ நீ சொந்த ஊருக்கு போனால்கூட உன் பையன் என்ன உயிரோடு எழுந்து வந்துடுவானா என்ன?.. இது லாக்டவுன்... நீ எங்கியுமே போக முடியாது" என்று சொல்லிவிட்டனர். அந்த சமயம்தான் அந்த பத்திரிகையாளர் நான் அழுவதை பார்த்து ஏன் அழுறீங்கன்னு கேட்டார்.. நான் விஷயத்தை சொன்னதும், உடனே அவருடைய காரில் என்னை ஏற்றி செல்ல முயன்றார்.. அதுக்குகூட போலீசார் விடல.. அந்த பத்திரிகையாளர் யார்கிட்டயோ பேசி எனக்கு சாப்பாடும், ரூ.5500 பணம் தந்து ரயிலில் டிக்கெட் ரிசர்வ் பண்ணி ஊருக்கு அனுப்பினார்.
பணக்காரர்கள்
பணக்காரர்களுக்கு எல்லாம் கிடைக்கும்.. அவங்களை காப்பாத்த நிறைய பேர் வருவாங்க.. ஏன், ஃபிளைட்ல கூட அவங்களை வெளிநாட்டுல இருந்தால் கூட்டிட்டு வருவாங்க.. இப்படி எங்களை மாதிரி புலம்பெயர்ந்த தொழிலாளர்களைதான் கண்டுகொள்ளாமல் விட்டுடறாங்க.. இதுதான் தொழிலாளர்கள் நிலை.. இதுதான் எங்களுக்கு மதிப்பு.
இறுதி சடங்கு
என் பையனுக்கு என்னுடைய பேரையும் சேர்த்து "ராம்பிரகாஷ்" என்று பேர் வெச்சேன்.. கடைசியில் மகன் இறந்து அந்த இறுதி சடங்கிற்கு எந்த அப்பாவாவது போகாமல் இருக்க முடியுமா?ன்னு சொல்லுங்க.. இப்போ நான் பெகுசாரி கிராமத்துக்கு வந்திருக்கேன்.. இங்க இருக்கிற ஒரு ஸ்கூலில் என்னை தங்க வெச்சிருக்காங்க... இன்னும் என் குடும்பத்தினரை பார்க்கல.. என் மனைவிக்கு உடம்ப சரியில்லையாம்.. என் பொண்ணுங்க எனக்காக காத்துக்கிட்டு இருக்காங்களாம்.. எப்போ போய் சேருவேன்னு தெரியல... என் நிலைமை எந்த அப்பாவுக்கும் வரக்கூடாது" என்றார்.