அடடே .. பீகாரில் இனி நிலையான அரசு தொடரும்... நிதிஷ்குமாரை ஓஹோவென பாராட்டிய பிரசாந்த் கிஷோர்!
டெல்லி: பீகாரில் ஆர்ஜேடியுடன் இணைந்து ஜேடியூ புதிய கூட்டணி ஆட்சியை அமைத்திருப்பதன் மூலம் மாநிலத்தில் நிலையான ஆட்சி தொடர்ந்து நடைபெறும் என்று தேர்தல் உத்தி வகுப்பாளரும் ஜேடியூவின் முன்னாள் துணை தலைவருமான பிரசாந்த் கிஷோர் பாராட்டியுள்ளார்.
தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் 2 ஆண்டுகாலம் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சியில் துணைத் தலைவராக இருந்தார். பின்னர் நிதிஷ்குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஜேடியூவில் இருந்து பிரசாந்த் கிஷோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் பீகார் அரசியல் மாற்றம் தொடர்பாக மவுனம் கலைத்து பேசியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர். பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஜேடியூ, லாலுவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. பாட்னாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றார்; ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக பதவியேற்றார்.
நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அமைச்சரவை ஆகஸ்ட் 15-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஆர்ஜேடி, ஜேடியூ இரு கட்சிகளும் தலா 14 அமைச்சர் பதவிகளைப் பெற உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவி மற்றும் 4 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளன.
பீகார் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: பீகாரில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சி அதிக இடங்களைப் பெற்றுள்ள தனிப்பெரும் கட்சி. புதிய அரசாங்கத்தை அமைத்ததில் தேஜஸ்வி யாதவின் பங்களிப்பு மிக முக்கியமானது. நிதிஷ்குமார் தலைமையிலான இந்த புதிய அரசு எப்படி செயல்படப் போகிறது என்பதை மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கின்றனர்.
Recommended Video
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் தொடர்ந்து ஜேடியூ பயணிப்பது என்பது சிக்கலாக இருந்தது. அதனால்தான் பாஜக கூட்டணியில் இருந்து ஜேடியூ விலகி இருக்கிறது. பீகார் மாநிலம் என்பது ஒரு மிகப் பெரிய மாநிலம்தான். ஆனால் இம்மாநிலத்தில் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் உடனடியாக தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திவிடாது. இப்படி ஒரு தலைகீழான முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னர் நிதிஷ்குமார் பல முறை யோசித்திருப்பார். பீகாரில் இனி நிலையான ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.