சபரிமலை: பெண்களுக்கு பாதுகாப்பு- கேரளாவுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் பிந்து அம்மினி மனு
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதற்கான பாதுகாப்பு வழங்க கேரளா அரசுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பிந்து அம்மினி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றியுள்ளது.
அதேநேரத்தில் ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என்கிற முந்தைய தீர்ப்புக்கு தடை எதுவும் விதிக்கவில்லை. இதனையடுத்து சபரிமலைக்கு செல்ல பெண்கள் நூற்றுக்கணக்கானோர் ஆன்லைனில் முன்பதிவு செய்தனர்.
ஆனால் கேரளா அரசோ, விளம்பரங்களுக்காக சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க இயலாது என திட்டவட்டமாக கூறிவிட்டது. மேலும் சபரிமலை செல்ல பம்பைக்கு வந்த பெண்களும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் தலைமையிலான பெண்கள் குழு அண்மையில் கொச்சி வந்தடைந்தது. அங்கிருந்து சபரிமலைக்கு செல்ல பாதுகாப்பு கேட்டு போலீசில் மனு கொடுத்தது.
அப்போது சமூக ஆர்வலர்களில் ஒருவரான பிந்து அம்மினி என்பவர் மீது மிளகாய் பொடி வீசப்பட்டது. மேலும் பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதனால் திருப்தி தேசாய் உள்ளிட்ட குழுவினர் கேரளாவிலிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் பிந்து அம்மினி ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், சபரிமலைக்கு பெண்கள் செல்ல உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. ஆகையால் சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரளா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.