முத்தலாக் செல்லாது தீர்ப்பு, விஜய் மல்லையாவுக்கு ஜெயில்..யார் இந்த புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித்?
டெல்லி: நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் (உதய் உமேஷ் லலித்) நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள யு.யு.லலித், முத்தலாக் செல்லாது என தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவர்.
நாட்டின் தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிக் காலம் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய தலைமை நீதிபதியாக சீனியாரிட்டி அடிப்படையில் யு.யு.லலித் நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதி யு.யு.லலித். இப்பதவியில் நவம்பர் 8-ந் தேதி வரை நீடிப்பார் யு.யு.லலித்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1957-ம் ஆண்டு பிறந்தவர் நீதிபதி யு.யு.லலித். 1983-ல் மும்பை உயர்நீதிமன்றத்தில் (பாம்பே ஹைகோர்ட்) வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். 1985-ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய லலித், பின்னர் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார்.
முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜியுடன் 1986 முதல் 1992வரை இணைந்து பணியாற்றியவர் நீதிபதி லலித். தேசிய சட்ட சேவைகள் ஆணையத் தலைவர் பதவியும் வகித்தார் யு.யு.லலித். 2004-ல் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமனம் பெற்றார். 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்துக்கு நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கில் சிபிஐ-ன் சிறப்பு அரசு வழக்கறிஞராக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார் யு.யு.லலித். உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த போது, முத்தலாக் ரத்து செய்து தீர்ப்பு அளித்த நீதிபதிகள் ஒருவர் யுயு லலித். வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதை தடுக்கவும் அவர் வழிமுறைகளை வகுத்து உத்தரவிட்டிருந்தார். அதேபோல் மாவட்ட நீதிமன்றங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துதல் தொடர்பான உத்தரவையும் பிறப்பித்திருக்கிறார் நீதிபதி லலித். மேலும் நாட்டை விட்டு தப்பி ஓடிய விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனை, ரூ2,000 அபராதம் விதித்தவரும் நீதிபதி யு.யு.லலித்தான்.
அதேநேரத்தில் நாட்டின் பல முக்கியமான வழக்கு விசாரணைகளில் இருந்து தம்மை யுயு லலித் விடுவித்துக் கொண்டிருக்கிறார். அயோத்தி வழக்கு, மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேனனின் மரண தண்டனைக்கு எதிரான மறு ஆய்வு மனு,கேரளாவின் சூர்யநெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் அப்பீல்கள் என முக்கியமான வழக்குகளில் இருந்து விலகியிருக்கிறார் நீதிபதி யுயு லலித்.
நாட்டின் மரபுகளின் படி புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித்தை தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரைத்துள்ளார். வரும் 27-ந் தேதி டெல்லியில் நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்கிறார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
UU Lalit: உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்-74 நாட்கள் மட்டும் பதவி வகிப்பார்!