ஆப்பாயில் சாப்பிட வேண்டாம்.. பறவை காய்ச்சலின் போது செய்யகூடாதவை.. FSSAI முக்கிய அறிவிப்பு
டெல்லி: பறவைக் காய்ச்சல் பரவுவதை கருத்தில் கொண்டு, மக்கள் அரை வேக்காட்டில் முட்டை மற்றும் அரைவேக்காட்டில் சமைத்த கோழி இறைச்சிகளை சாப்பிட வேண்டாம் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோழி இறைச்சியை சரியான முறையில் சமைப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தியுள்ள இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம், பறவை காய்ச்சல் காரணமாக நுகர்வோர் மற்றும் உணவு வணிகர்கள் "பீதி அடைய வேண்டியதில்லை" என்றும், கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை முறையாக கையாள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
கேரளா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகிய ஆறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் அதிகமாக பரவி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எப்படி பரவுகிறது
இந்தியாவில், செப்டம்பர் முதல் மார்ச் மாதங்களுக்கு இடையில் குளிர்கால மாதங்களில் நாட்டிற்கு வரும் புலம் பெயர்ந்த பறவைகளால் பறவைக் காய்ச்சல் பரவுகிறது. இதையடுத்து, FSSAI, இறைச்சி மற்றும் முட்டைகளை பாதுகாப்பாக கையாளுதல், பதப்படுத்துதல் மற்றும் நுகர்வு செய்தல்' என்ற தலைப்பில் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது
வைரஸ் எப்படி இருக்கும்
ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பறவைகளின் சுவாச மற்றும் இரைப்பைக் குழாய்களில் காணப்படுகின்றன, இறைச்சியில் அல்ல. இருப்பினும், எச் 5 என் 1 திரிபு போன்ற அதிக நோய்க்கிருமி வைரஸ்கள் இறைச்சி உட்பட பாதிக்கப்பட்ட பறவையின் அனைத்து பகுதிகளுக்கும் பரவுகின்றன. அதிக நோய்க்கிருமி ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிக்கப்பட்ட பறவைகள் இடும் முட்டைகளின் உள்ளேயும் மேற்பரப்பிலும் வைரஸ் காணப்படுகிறது.
எப்படி இருக்கும்
நோய்வாய்ப்பட்ட பறவைகள் பொதுவாக முட்டைகளை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடும் என்றாலும், நோயின் ஆரம்ப கட்டத்தில் இடப்பட்ட முட்டைகளில் முட்டை-வெள்ளை மற்றும் மஞ்சள் கரு மற்றும் ஷெல்லின் மேற்பரப்பில் வைரஸ்கள் இருக்கலாம்.
பச்சை முட்டை
இதன் காரணமாகவே "சரியான முறையில் சமைக்கப்படாத இறைச்சி மற்றும் வேகவைக்கப்படாத முட்டைக்குள் வைரஸ் அப்படியே இருக்கும் என்பதால் அவற்றை அப்படி உண்ணக்கூடாது. மேலும்முட்டைகளை பச்சையாகவோ அல்லது ஓரளவு சமைக்காமலோ உண்ண கூடாது" என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் கூறியுள்ளது.