பரவும் பறவைக் காய்ச்சல்.. கேரளா, ஹரியானா விரையும் வைராலஜி நிபுணர் குழு! டெல்லியில் கட்டுப்பாட்டு அறை
டெல்லி: பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், மத்திய அரசின் வைராலஜி நிபுணர் குழுவை, ஹரியானா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது மத்திய அரசு.
ஒரு பக்கம் கொரோனா நோய் பரவல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
கேரளாவின், ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் வார்த்து பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பரவியது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் இருந்து, கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் போன்றவற்றை தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு பரவக்கூடியது என்ற போதிலும், இதுவரை யாரும் இதனால் பாதிக்கப்பட்டதாக பதிவாகவில்லை. இந்த நிலையில் பறவை காய்ச்சலை உடனடியாக கட்டுப்படுத்துவதற்காக, சண்டிகரில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டியூட் அமைப்பில் உள்ள நிபுணர்களை ஹரியானா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது மத்திய அரசு.
டெல்லியில் கட்டுப்பாட்டு அறை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றி தினந்தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பறவைகளின் மாமிசம் மற்றும் முட்டை மற்றும் கழிவுகள் போன்றவற்றின் மூலமாக அது மனிதர்களுக்கு பரவும் அபாயம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.