லோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு பாஜக கூட்டணி கட்சிகளிடையே போட்டா போட்டி!!
டெல்லி: லோக்சபாவுக்கான துணை சபாநாயகர் பதவியை கைப்பற்றுவதில், பாஜக கூட்டணி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
லோக்சபா சபாநாயகராக பாஜகவை சேர்ந்த எம்பி ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. ஆனால், துணை சபாநாயகர் பதவிக்கு இதுவரை யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
துணை சபாநாயகர் பதவி என்பது பொதுவாக எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படும் நடைமுறை இருந்து வந்தது. ஆனால், சென்ற முறை போன்றே இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்து யாருக்கும் கிடைக்கவில்லை. கடந்த முறை பாஜகவின் தோழமை கட்சியாக இருந்த அதிமுக.,விற்கு துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது.
எனவே, இந்த முறையும் துணை சபாநாயகர் பதவி பாஜக கூட்டணி கட்சிகளுக்கே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. துணை சபாநாயகர் பதவியை கைப்பற்றுவதற்கு பாஜகவின் தோழமை கட்சிகளாக செயல்படும் சிவசேனா, பிஜு ஜனதா தளம் இடையே கடும் போட்டி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
பாஜகவின் மற்றொரு கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், அமைச்சரவையில் இடம்பெற மாட்டாம் என்று அறிவித்தாலும், துணை சபாநாயகர் பதவி மீது ஒரு கண் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே, கடந்த முறையைவிட இந்த முறை துணை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி எழுந்துள்ளது.
ஆந்திராவில் ஆட்சியை பிடித்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 22 எம்பி.க்கள் உள்ளனர். எனவே, துணை சபாநாயகர் பதவி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் மட்டுமே இதனை ஏற்க முடியும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
எனவே, இந்தமுறை துணை சபாநாயகர் பதவியை எந்த கட்சி கைப்பற்றப் போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. சிவசேனா அல்லது பிஜு ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையேதான் நேரடி போட்டியாக இருப்பதால், இரு கட்சிகளில் ஒருவர் அந்த துணை சபாநாயகர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.