அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பாஜக உயர்மட்ட குழு.. கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை
டெல்லி: டெல்லியில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்டக்குழு சார்பாக, இன்று அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகத்தில் நிவலி வரும் அரசியல் சூழலை நாடே உற்று நோக்கி வருகிறது. காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏ-க்கள் 10க்கும் மேற்பட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதற்கான கடிதத்தை கர்நாடக பேரவை சபாநாயகரிடமும் அளித்துள்ளனர். இதனையடுத்து அம்மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் கூட்டணி அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலைமை சிக்கலானதை தொடர்ந்து வெளிநாட்டு பயணத்தை பாதியிலேயே முடித்து கொண்டு, கர்நாடக முதல்வர் குமாரசாமி நாடு திரும்புகிறார்.
கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு எல்லாம் பாஜக-வின் ஆபரேஷன் தாமரை திட்டமே காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மஜத எம்எல்ஏ விஸ்வநாத் எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய ஆபரேஷன் தாமரை காரணமல்ல.
மக்களின் நம்பிக்கையை கர்நாடகத்தை ஆளும் கூட்டணி அரசு பெற தவறியதால் தான் ராஜினாமா முடிவை எடுத்துள்ளோம். இதற்கும் பாஜக-விற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றார். கர்நாடகத்தில் அடுத்தடுத்து நிலவும் அரசியல் திருப்பங்களை பயன்படுத்தி, எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியமைக்க தயாராகி வருகிறது.
ஏனெனில் கர்நாடகத்தில் ஒன்றரை வருடங்களுக்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்படுவதை எந்த கட்சிகளுமே விரும்பவில்லை. இந்நிலையில் தான் தலைநகர் டெல்லியில் பாஜக-வின் உயர்மட்டக்குழுவின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சித் தலைவர் அமித்ஷா மற்றும் செயல் தலைவரான ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் கர்நாடகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து விவாதித்து, முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.