இலங்கையில் பாஜக கட்சி தொடங்க முடியாது.. தேர்தல் ஆணையம் திட்டவட்ட அறிவிப்பு
டெல்லி: பாஜக இலங்கையில் கட்சி துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுபோல அனுமதிக்க முடியாது என்று இலங்கை தேர்தல் ஆணையர் நிமல் புஞ்சிவேவா தெரிவித்துள்ளார்.
திடீரென, இலங்கையில் பாஜக கட்சி துவங்கப்போவதாக ஏன் தகவல் பரவியது என்று கேட்கிறீர்களா? திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் குமார் தேப் அளித்த பேட்டியில்தான் இப்படி ஒரு விஷயத்தை முதல் முறையாக தெரிவித்தார்.
இலங்கை மற்றும், நேபாளம் நாட்டில், பாஜக கட்சி துவங்க உள்ளதாக பில்லப் குமார் தேப் கூறியிருந்தார். அமித் ஷா பாஜக தலைவராக இருந்தபோது, கட்சி தலைவர்களிடம், இப்படி கூறியிருந்தார். அதாவது ஆத்மநிர்பார் தெற்கு ஆசியா என்பது இந்த திட்டத்திற்கு பெயர். இவ்வாறு பில்லப் குமார் தேப் கூறினார். இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில்தான், இலங்கை தேர்தல் ஆணையர் நிமல் புஞ்சிவேவா அளித்த பேட்டியில், இந்த தகவல்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
"எந்தவொரு இலங்கை அரசியல் கட்சிகளும் அல்லது குழுவும் வெளிநாடுகளில் உள்ள எந்தவொரு கட்சியுடனும் அல்லது குழுவுடனும் வெளிப்புற தொடர்புகளை வைத்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் வெளிநாட்டு அரசியல் கட்சிகள் இங்கு செயலாற்ற இலங்கை தேர்தல் சட்டங்கள் அனுமதிக்கவில்லை" என்று புஞ்சிஹேவா செய்தியாளர்களிடம் உறுதியாக தெரிவித்தார்.
45 வேணும்.. ஒத்தக்காலில் நிற்கும் தமிழக பாஜக.. சொன்னா கேக்க மாட்டீங்க.. டெல்லில பேசிக்கறோம்- அதிமுக
திரிபுரா முதல்வர் கருத்தை, ஒரு ஜோக் என்று வர்ணித்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. அவர் நகைச்சுவையாக பேசுவதாக கூறியிருந்தார். ஆனால், அகண்ட பாரதம் என்பது பாஜக அடிப்படை கொள்கையாகும். அதாவது இலங்கை முதல் ஆப்கன் வரையிலான பகுதிதான் அகண்ட பாரதம்.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதால், அடுத்து அண்டை நாடுகளில் ஆட்சியமைக்க அது திட்டமிட்டது.
அமித் ஷா திட்டம் பில்லப் குமார் தேப் மூலம் வெளியே வர, அதற்கு இலங்கை தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளதால், இப்போது இது சர்வதேச அளவிலான விவகாரமாக பார்க்கப்படுகிறது.