முறையான சோதனைக்கு முன் கோவாக்சின் அனுமதி? விமர்சிக்கும் காங்கிரஸ்... பாயும் பாஜக தலைவர்கள்
டெல்லி: கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கதியில் அனுதி அளிக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டிற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்தியாவில் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதியளிக்கலாம் என்று இந்திய சிறப்பு நிபுணர் குழு சில நாட்களுக்கு முன் பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரையை ஏற்று இவ்விரு கொரோனா தடுப்பூசிகளின் அவரசகால பயன்பாட்டிற்குத் தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று அனுமதி அளித்து. தடுப்பூசி வழங்கும் பணிகள் இந்தியாவில் இன்னும் சில நாள்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிருப்தி
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்களும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீட்டு தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளதற்கு வரேவற்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம் ஹைரதாபாத்தைச் சேர்ந்த பாரத்பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சோதனைக்கு முன் அனுமதி ஏன்
மூன்றாம்கட்ட மருத்துவ சோதனை முடியாமல் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கதியில் அனுமதி அளிக்கப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் விமர்சித்திருந்தனர். இது தொடர்பாகக் காங்கிரஸின் சசி தரூர், ஜெய்ராம் ராமேஷ் ஆகியோர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
நட்டா பாய்ச்சல்
இந்நிலையில், இதற்குப் பதிலளித்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, "மக்களுக்கு உதவும், ஒரு பாராட்டத்தக்க வெற்றியை இந்தியா அடையும்போதெல்லாம், அந்தச் சாதனைகளை எதிர்ப்பதற்கும் கேலி செய்வதற்கும் காங்கிரஸ் வருகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு அவர்கள் இவற்றை எதிர்க்கிறார்களோ, அவ்வளவு அவ்வளவு அவர்களின் குட்டு வெளிப்படுகிறது. இதன் சமீபத்திய உதாரணம் கொரோனா தடுப்பூசி.
மற்ற விஷயங்களில் அரசியல் செய்யுங்கள்
தோல்வியடைந்த தங்கள் அரசியலை காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் இதிலும் செய்கின்றனர். இவர்கள் மக்களின் மனதில் பீதியை ஏற்படுத்த முயல்கின்றனர். இதை விட்டுவிட்டு மற்ற விஷயங்களில் அவர்கள் அரசியல் செய்யலாம்" என்றார்.
அவமானகரமான ஒரு செயல்
அதேபோல மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "இதுபோன்ற ஒரு முக்கியமான பிரச்சினையை அரசியலாக்குவது, அது யாராக இருந்தாலும், மிகவும் அவமானகரமான ஒரு செயல். நீங்கள் உங்களை இழிவுபடுத்துகிறீர்கள் என்பதை உணருங்கள்!" என்று கடுமையாக எதிர்க்கட்சிகளைச் சாடியுள்ளார்.