இத கவனிச்சீங்களா? “திருவள்ளுவர் வழியில் மோடி ஆட்சி”.. நாடாளுமன்றத்தில் புகழ்ந்து தள்ளிய ஜனாதிபதி
மத்திய அரசு திருவள்ளுவர், குரு நானக், ஆதி சங்கரர் ஆகியோரின் வழியில் ஆட்சி செய்து வருவதாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
டெல்லி: திருவள்ளுவர், குரு நானக், ஆதி சங்கரர் வழியில் மத்திய அரசு ஆட்சி செய்து வருவதாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புகழாரம் சூட்டி இருக்கிறார். நாளை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் இன்று அறிமுக உரையாற்றிய திரௌபதி முர்மு இவ்வாறு கூறி உள்ளார்.
2024 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், மோடி 2.O அரசின் கடைசி முழு நீள பட்ஜெட் நாளை காலை லோக் சபாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கூடி இருக்கிறது. லோக் சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள் மத்தியில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திரௌபதி முர்மு உரையாற்றினார்.
குடியரசுத் தலைவர் உரையில் “காசி தமிழ் சங்கமம்”.. ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக திரௌபதி முர்மு புகழாரம்
குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு
முன்னதாக இதில் உரையாற்றுவதற்காக நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு வந்த அவரை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். குடியரசுத் தலைவர் முர்முவை தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் உரை நிகழ்த்தினார்.
அறிமுக உரை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது உரையின்போது மத்திய அரசின் திட்டங்கள், பாஜக அரசின் நடவடிக்கைகளால் உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், பயங்கரவாத ஒழிப்பு என பல்வேறு விசயங்கள் குறித்து உரை நிகழ்த்தினார். 2047 ஆம் ஆண்டிற்குள் நமது நாட்டின் கடந்த கால பெருமைகள் நவீன கால சிறந்த தருணங்களுடன் இணைக்கப்படும்.
இந்தியர்கள் தன்னம்பிக்கை
நாம் மக்கள் நலனுக்கான இந்தியாவை உருவாக்கிட வேண்டும். அம்ரித் காலின் 25 ஆண்டுகாலம் என்பது இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கானது. இன்று ஒவ்வொரு இந்தியரின் தன்னம்பிக்கையும் அதிகரித்து உள்ளது. நம் மீதான உலகின் பார்வை நம்ப முடியாத அளவிற்கு தற்போது மாறி இருக்கிறது.
செழிப்பான நடுத்தர வர்க்கம்
சுய சார்பு கொண்ட இந்தியாவை நாம் உருவாக்கிட வேண்டும். இன்று நாட்டில் நிலையான, துணிச்சலான, தீர்க்கமான அரசாங்கம் உள்ளது. வறுமை இல்லாத, நடுத்தர வர்க்கம் செழிப்பாக இருக்கும் இந்தியா உருவாகிட இளைஞர்களும், பெண்களும் முன் வரிசையில் நிற்க வேண்டும். அவர்கள் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் பாதையை காட்ட வேண்டும். இந்தியாவின் இளைஞர்கள் காலத்தை விட 2 அடி முன்னாள் உள்ளார்கள்.
திருவள்ளுவர் வழியில் ஆட்சி
மிகப்பெரிய விண்வெளி சக்தியாக இந்தியா உருவெடுத்து இருக்கிறது. ஆதிசங்கரர், திருவள்ளுவர், குருநானக் ஆகியோரின் வழியில் மத்திய அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் ஆன்மீக யாத்திரை தளங்கள் மேம்படுத்தப்பட்டு வரும் அதே நேரம், வரலாற்று சிறப்பு மிக்க தளங்களையும் மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.