இன்று கூடுகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்... இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக அரசின் இறுதி பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இன்று துவங்கி வரும் 13 வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்
இந்த நிலையில், 2019 - 2020 ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பியூஷ் கோயல் நாளை தாக்கல் செய்ய உள்ளார்.
இதற்கிடையே, குடியுரிமை திருத்த மசோதா, தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா உள்ளிட்ட பல முக்கிய சட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தனிநபர் மசோதா மீதான விவாதம் வரும் 8 அன்று நடைபெற உள்ளது. இருப்பினும் வழக்கம் போல் ரபேல் ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.