வன்முறையை உருவாக்குவதே அரசுதான்.. சோனியா காந்தி கடும் குற்றச்சாட்டு
Recommended Video
டெல்லி: இந்திய நாட்டு இளைஞர்களுக்கு எதிராக பாஜக அரசு போர் தொடுத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதை கண்டித்து, சோனியா காந்தி இன்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவது அரசின் பொறுப்பு, அதில் இந்த அரசு தோல்வி அடைந்துள்ளது. மாணவர்கள் மீதான தாக்குதல் பாஜக அரசுக்கு முடிவின் தொடக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தியின் கருத்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது, அதில் அவர் கூறியுள்ளதாவது:
மோடி அரசு இந்த நாட்டை வெறுப்பு மற்றும் சகிப்பின்மை என்ற நிலைக்கு தள்ளி கொண்டு இருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தைரியமிருந்தால் வடகிழக்கு மாநிலங்களுக்கு இப்போது அவர்கள் செல்ல தயாரா?
ஒரு அரசின் பணி என்பது அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது. அரசியலமைப்பை பாதுகாப்பது. ஆனால் பாஜக அரசு இந்த நாட்டையும் நாட்டின் இறையாண்மை மீது நம்பிக்கை கொண்டவர்களையும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. வன்முறையை உருவாக்குவதே மோடி அரசுதான். ஆளும் அரசே வன்முறையில் ஈடுபட்டால், அரசியல் சாசனம் மீது தாக்குதல் நடத்தினால், இந்த நாட்டின் இளைஞர்கள் மீது மனிதாபிமானம் இல்லாமல் தாக்குதல் நடத்தினால் எப்படி இந்த நாடு நடை போடும்?
நாட்டில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவதும், வன்முறைகளை உருவாக்குவதும், இளைஞர்களின் உரிமைகளை பறிப்பதும், மத வெறுப்பை உருவாக்குவது போன்றவை தான் இந்த அரசின் நோக்கம் என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்
இதனிடையே, இந்தியா கேட் பகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி திடீரென இன்று தர்ணா போராட்டம் நடத்தி, மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.