ஓராண்டுக்கும் மேல் காலியாக இருக்கும் லோக்சபா துணை சபாநாயகர் பதவி.. குழப்பத்திலேயே மூழ்கிப் போன பாஜக
டெல்லி: ராஜ்யசபா துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் நிலையில் ஓராண்டுக்கும் மேலாக இருக்கும் லோக்சபா துணை சபாநாயகர் பதவி எப்போது நிரப்பப்படும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஓராண்டுக்கும் மேலாக லோக்சபா துணை சபாநாயகர் பதவி நிரப்பப்படாமலேயே இருக்கிறது. 1989-ம் ஆண்டு வரை பொதுவாக லோக்சபா துணை சபாநாயகர் தேர்தல்களில் எந்த தாமதும் இருந்தது இல்லை. புதிய லோக்சபா அமைந்து அதிகபட்சம் 17 நாட்களில் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படுவது மரபாக இருந்தது.
1989-ல் வி.பி. சிங் தலைமையில் புதிய அரசு அமைந்த போது துணை சபாநாயகர் யார் என்பதில் பெரும் இழுபறி நீடித்தது. 91 நாட்கள் இந்த இழுபறி நீடித்த நிலையில்தான் சிவராஜ் பாட்டீல் துணை சபாநாயகராக்கப்பட்டார். அதற்கு அடுத்ததாக 10-வது லோக்சபாவில் பிரதமராக இருந்தார் நரசிம்மராவ். அவரது பதவி காலத்தில் 35 நாட்களும் பின்னர் வாஜ்பாய், தேவகவுடா, குஜ்ரால் அரசுகள் காலத்தில் 51 நாட்களும் துணை சபாநாயகர் தேர்வுக்கு தாமதாகின.
"இந்தி தெரியாது போடா"ன்னா படிக்காம போங்க".. திராவிட இயக்கங்களின் அடித்தளமே பொய்தான்: எச்.ராஜா பளிச்
7 நாட்களில் து.சபாநாயகர் தேர்வு
1998ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த பாஜக ஆட்சிக் காலத்திலும் லோக்சபா துணை சபாநாயகர் பதவி நீண்டநாட்கள் நிரப்பப்படாமலேயே இருந்தது. பின்னர் ஒருவழியாக காங்கிரஸின் பி.எம். சயீத், லோக்சபா துணைசபாநாயகராக்கப்பட்டார். 1999, 2004, 2009 ஆட்சிக் காலங்களில் 7 நாட்களிலேயே துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டுவிட்டார்.
எதிர்க்கட்சிகளுக்கு பதவி
2014-ல் மோடி பிரதமரான போது, துணை சபாநாயகர் தேர்வுக்கு 70 நாட்களானது. அப்போது அதிமுகவின் தம்பிதுரைக்கு துணை சபாநாயகர் பதவியை கொடுத்தது பாஜக. 1977-ம் ஆண்டு வரை லோக்சபா துணை சபாநாயகர் பதவியை ஆளும் காங்கிரஸ்தான் வகித்து வந்தது. இந்த பதவியை எதிர்க்கட்சிகளுக்குத் தரும் மரபு 1977-ல் தொடங்கியது. அப்போதைய மொரார்ஜி தேசாய் அரசாங்கம் காங்கிரஸுக்கு லோக்சபா துணை சபாநாயகர் பதவியை கொடுத்தது.
திமுக, அதிமுகவுக்கு து.சபாநாயகர் பதவி
1980-ல் காங்கிரஸ் அரசு அப்போதைய அதன் கூட்டணி கட்சியான திமுகவுக்கு (கோவிந்தசாமி லட்சுமணன்) கொடுத்தது. 1984-ல் காங்கிரஸின் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு (தம்பிதுரை) லோக்சபா துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது. 1989-ல் எதிர்க்கட்சிகளுக்கு லோக்சபா துணை சபாநாயகர் பதவியை வழங்கும் மரபு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. இதனையே நரசிம்மராவ், வாஜ்பாய் மற்றும் மன்மோகன்சிங் அரசுகளும் பின்பற்றி.
மீண்டும் அதிமுகவுக்கு..
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்தது. அந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத அளவுக்கு காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி கொடுக்கப்படவில்லை. பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கே துணை சபாநாயகர் பதவி கொடுத்தது. அதிமுகவின் தம்பிதுரை 2-வது முறையாக லோக்சபா துணை சபாநாயகரானார். ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை தேவைப்படும் நிலையில் அதிமுகவின் ஆதரவு தேவை என்பதால் இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டது என்பது வரலாறு.
திமுக நிராகரிப்பு
2019 லோக்சபா தேர்தலிலும் பாஜக வென்றது; காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை மீண்டும் பெற முடியாமல் போனது அதிமுகவுக்கு லோக்சபாவில் ஒரே ஒரு எம்பிதான்.. ஆனால் திமுகவுக்கு 24 எம்.பி.க்கள் உள்ளனர். இதனால் திமுகவுக்கு லோக்சபா துணை சபாநாயகர் பதவியை பாஜக கொடுக்கலாம் என கூறப்பட்டது. இருப்பினும் இதனை திமுக ஏற்கவும் முன்வரவில்லை.
ஊசலாட்டத்தில் பாஜக
இதனையடுத்து பிஜூ ஜனதா தள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளுக்கு லோக்சபா துணை சபாநாயகர் பதவி கொடுக்க பாஜக அரசு முன்வந்தது. இந்த இரு கட்சிகளும் இதுபற்றி எந்த முடிவையும் சொல்லாமலேயே காலங்கடத்தின. இப்படியான ஊசலாட்டங்களாலும் குழப்பங்களாலும்தான் ஓராண்டுக்கும் மேலாக லோக்சபா துணை சபாநாயகர் பதவி காலியாகவே கிடக்கிறது.