அரசியலமைப்பு மீது தாக்குதல்., ஜனநாயக படுகொலை.. பாஜக மீது சசி தரூர் சரமாரி குற்றச்சாட்டு
டெல்லி: கர்நாடகத்திலும், கோவாவிலும் நிகழும் அரசியல் குழப்பங்களுக்கு பாஜக-வே காரணம் என குற்றம்சாட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பி-க்கள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலை முன் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியின் முக்கிய எம்பி-க்களும், முன்னாள் மத்திய அமைச்சர் அந்தோணி, ஆனந்த் சர்மா உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.
நாட்டின் ஜனநாயகத்தை பாஜக தொடர்ந்து படுகொலை செய்து வருவதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர். ஜனநாயகத்தை காப்பாற்றுவோம் என எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி தொடர் முழக்கமிட்டனர் காங்கிரஸ் எம்பி-க்கள். அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், கோவா மற்றும் கர்நாடகா இரு மாநிலங்களிலும் பாஜக அரசியலமைப்பு மீது தாக்குதலை நடத்தி வருகிறது.
நாளை சட்டசபை வராவிட்டால், கட்சி தாவல் சட்டம் பாயும்.. காங். எம்எல்ஏக்களுக்கு அதிரடி விப் உத்தரவு
நிச்சயமாக இது ஜனநாயக படுகொலை தான் என சாடிய அவர், 37 சதவீத வாக்குகள் பெற்று பாஜக கோவாவில் ஆட்சியமைத்தது. ஆனால் 63 சதவீத மக்கள் அங்கு பாஜக-வை ஏற்கவில்லை.
அவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து பெரும்பான்மை ஆதரவை பெற நினைக்கிறது பாஜக என புகார் தெரிவித்த சசி தரூர், இதற்கு வசதியாகவே பெரும்பான்மை கொண்ட ஆட்சியாக மாற பல முறைகேடுகளில் ஈடுபடுகிறது.
இந்திய அரசியலமைப்பில் ஒருவர் வெற்றி பெறுவர், ஒருவர் தோல்வியுறுவர். வெற்றி பெறுபவர்கள் நேர்மையுடன் செயலாற்ற வேண்டும். ஆனால் இங்கு நடப்பது என்ன என்று வினவினார்.
இதே போல இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களும் பாஜக-வை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.